search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் நகை - பணம் மோசடி: 3 பேர் கைது
    X

    வில்லியனூரில் தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் நகை - பணம் மோசடி: 3 பேர் கைது

    வில்லியனூரில் தோ‌ஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் நகை-பணத்தை அபகரித்த சென்னை தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சிவகணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது45), ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. இதுபற்றி அவரதுமனைவி மீராபாய் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    இதனை எப்படியோ தெரிந்து கொண்ட 2 பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் மீராபாயை அணுகியது. அவர்கள் ஆனந்தனுக்கு யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டதாகவும் தோ‌ஷம் கழித்தால் நோய் குணமாகி விடும் என்று உருக்கமாக கூறினர்.

    இதனை நம்பிய மீராபாய் கணவருக்கு தெரியாமல் அவ்வப்போது சேமித்து வைத்திருந்த ரூ. 2 லட்சத்துக்கும் மேலான பணத்தை கொடுத்து தோ‌ஷம் கழிக்குமாறு கூறினார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த கும்பல் கோவில் பிரசாதங்களை வழங்கி சில நாட்களில் ஆனந்தனுக்கு நோய் குணமாகி விடும் என்று ஏமாற்றி வந்தனர். மீராபாயிடம் பணம் காலியாகி விட்டதை தெரிந்து கொண்ட அந்த கும்பல் அவரிடமிருந்த நகைகளை அபகரிக்க திட்டமிட்டது.

    ஒரு நாளைக்கு ஒரு கோவிலுக்கு செல்வதாக கூறி மீராபாயிடம் தாலிசெயின் உள்பட 36 பவுன் நகைகளை பறித்து கொண்டது.இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சமாகும். திடீரென ஒரு நாள் ஆனந்தன் மனைவியின் கழுத்தில் தாலி செயின் இல்லாததை கண்டு அவரிடம் கேட்டார். அப்போது நடந்த விவரங்களை கணவரிடம் மீராபாய் தெரிவித்தார். இதனை கேட்டு ஆனந்தன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த கும்பல் கொடுத்திருந்த செல்போன் எண்ணில் ஆனந்தன் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுபற்றி வில்லியனூர் போலீசில் ஆனந்தன் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த கும்பல் கொடுத்திருந்த செல்போன் எண் மூலம் துப்பு துலக்கினர். இதில் மீராபாயிடம் நகை- பணத்தை அபகரித்த கும்பல் சென்னை கிழக்கு தாம்பரம் மோதிலால்நகர் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, உறவினர் அங்காளபரமேசுவரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வில்லியனூர் போலிசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×