search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் மாவட்டத்தில் நாளை புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
    X

    திருவாரூர் மாவட்டத்தில் நாளை புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

    திருவாரூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது.

    வரைவு வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர், மன்னார்குடி, வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல 1152 வாக்குச்சாவடி மையங்களிலும் தொடர்புடைய பாகங்களின் வாக்காளர் பட்டியல்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 18 வயது நிறைவடைந்து இதுநாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், 1.1.18 அன்று 18 வயது நிறைடைய உள்ளவர்களும், அதாவது 31.12.99 வரை பிறந்தவர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6-ஐ பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் மார்பளவு வண்ண நிழற்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம் 7-லும், திருத்தம் செய்வதற்கும் படிவம் -8லும் , ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8யு-லும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் 31.10.2017 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை (22-ந் தேதி) காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை சிறப்பு முகாம் நடக்கிறது. அதில் விண்ணப்பங்கள் பெறப்படும்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×