search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் பேட்டி
    X

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் பேட்டி

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென நேற்று காலை ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அண்மையில் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்திருந்தார். இதே போன்று தமிழக காங்கிரசின் ஏனைய தலைவர்களும் டெல்லி சென்று சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்தித்திருந்தனர்.

    இதனால், திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என பேசப்பட்டது. இந்த நிலையில், திருநாவுக்கரசர் நேற்று காலை திடீரென சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார்.

    சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, உட்கட்சி மற்றும் தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறும்போது, “மரியாதை நிமித்தமாக தான் ப.சிதம்பரத்தை சந்தித்தேன். தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் பேசினோம்” என்றார்.

    அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு திருநாவுக்கரசர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- சமீபத்தில் நீங்கள் டெல்லி சென்றபோது, சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறதே?

    பதில்:- இது முற்றிலும் தவறான தகவல். நான் டெல்லி சென்று சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்தேன். தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினேன். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து நான் கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. இது போன்ற வதந்தியை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

    கேள்வி:- தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமனம் செய்ய சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு அதிகாரம் அளித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது ஏன்?

    பதில்:- தமிழகத்தை மட்டும் பார்த்து கொண்டு இருக்காதீர்கள். பரவலாக பாருங்கள். எல்லா மாநிலத்திலும், அதுபோல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் விசேஷமாக அப்படி தீர்மானம் போடப்படவில்லை.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
    Next Story
    ×