search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
    X

    தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

    அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கிடும் மத்திய அரசின் முடிவினை தமிழக அரசு ஆய்வு செய்து மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியினை 1.7.2017 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கிட முடிவெடுத்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியினை 1.7.2017 முதல் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்துவதற்கான தனது முடிவினை அறிவித்துள்ளது.

    இந்திய அரசு தனது அலுவலகக் குறிப்பாணையில், 6-வது மத்திய சம்பள ஆணையம் பரிந்துரைத்த ஊதிய விகிதத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை தற்போதுள்ள 136 சதவீதத்திலிருந்து 139 சதவீதமாக முன்தேதியிட்டு 1.7.2017 முதல் உயர்த்தி ஆணையிட்டுள்ளது.

    2016-க்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் பெறுவோருக்கான அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கிடும் மத்திய அரசின் முடிவினை அரசு கவனமாக ஆய்வு செய்து மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியினை 1.7.2017 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கிட முடிவெடுத்துள்ளது. அதன்படி, அரசு ஊழியருக்கான அகவிலைப்படியினைக் கீழ்கண்டவாறு உயர்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

    வழங்கப்படும் நாள் 1.7.2017 முதல். அகவிலைப்படி வீதம் (மாதம் ஒன்றுக்கு) அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 139 சதவீதமாக இருக்கும்.

    மேலும் ஜூலை, 2017 முதல் செப்டம்பர், 2017 வரையிலான காலத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை உடனடியாகப் பெறப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

    திருத்தப்பட்ட அகவிலைப்படியைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்பட வேண்டும். அதுவே 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும் என்றும் அரசு ஆணையிடுகிறது.

    அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படியுடன் சில்லரைச் செலவு நிதியிலிருந்து நிலையான வீதத்தில் மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். இத்திருத்தியமைக்கப்பட்ட அகவிலைப்படி பகுதி நேர அலுவலர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

    இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ் சம்பளம் பெறும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் மானியம் பெறும் பல்தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுபற்றி நிதித்துறை உயர் அதிகாரியிடம் கேட்டதற்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் பெறுபவர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தற்போது 7-வது ஊதியகுழு பரிந்துரை அடிப்படையில் சம்பளம் பெறுபவர்களுக்கு 1 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்றார்.
    Next Story
    ×