search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதகடிப்பட்டில் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    மதகடிப்பட்டில் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    மதகடிப்பட்டில் கழிவு நீரை அகற்ற கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருபுவனை:

    மதகடிப்பட்டு சந்தை தோப்பு காலனி பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் வாய்க்காலில் கழிவுகள் அடைபட்டு கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டது. மேலும் இந்த கழிவுநீர் குடிநீரில் கலக்கும் அபாயம் உருவானது.

    அதோடு கொசுக்கள் பெருகி அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை ஒன்று திரண்டு அங்கு குவிந்திருந்த கழிவுகளை நடுரோட்டில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பேசி உடனடியாக கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனை ஏற்று பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 15 நிமிடம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×