search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘எம்டன்’ கப்பலின் கம்பீர தோற்றம்
    X
    ‘எம்டன்’ கப்பலின் கம்பீர தோற்றம்

    எம்டன் கப்பல் சென்னையில் குண்டு வீசி நாளையுடன் 103 ஆண்டுகள் நிறைவு

    முதலாம் உலகப் போரின்போது ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி நாளையுடன் (வெள்ளிக்கிழமை) 103 ஆண்டுகள் நிறைவடைகிறது.
    சென்னை:

    உலகத்தையே உலுக்கிய முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது.

    அப்போது இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை ‘மதராசப்பட்டினம்’ என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தை அமைத்திருந்தனர்.

    இதனால் ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது திரும்பியது. ஜெர்மனியின் ‘எஸ்.எம்.எஸ். எம்டன்’ என்ற நவீன போர் கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை நோக்கி வீரர்கள் விரைந்தனர். அந்த கப்பலில், திருவனந்தபுரத்தின் தமிழ் குடும்பத்தை சேர்ந்த பொறியாளர் செண்பகராமன் என்ற வீரரும் இடம்பெற்றிருந்தார். ஜெர்மனியின் படையில் அவர் இருந்தபோதும், இங்கிலாந்தின் பிடியில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தார்.

                                                         பொறியாளர் செண்பகராமன்

    செப்டம்பர் 22-ந்தேதி இரவு, சென்னையில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் ‘எம்டன்’ கப்பல் நிலைநிறுத்தப்பட்டது. இதை அறிந்த ஆங்கிலேயர்கள் மின்சாரத்தை நிறுத்தி நகரையே இருளில் மூழ்கச் செய்தனர். ஆனால் ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த கலங்கரை விளக்கம் மட்டும் எரிந்துகொண்டிருந்தது.

    அந்த வெளிச்சத்தை மையமாக வைத்து, எம்டன் கப்பலில் இருந்து பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீசினர். இதில் சென்னை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. ஒரு குண்டு வெடித்து ஐகோர்ட்டு சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. மற்றொரு குண்டு வெடிக்காமல் ஐகோர்ட்டு வளாகத்திலேயே கிடந்தது.

    சேதத்தை ஏற்படுத்திவிட்டு எம்டன் கப்பல் சென்னையைவிட்டு ஆழ்கடலுக்கு சென்றது. ஆங்கிலேயே கடற்படை பின்தொடர்ந்தும், எம்டன் கப்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயே படைக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த ‘எம்டன்’ கப்பலும் 1914-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி ஆஸ்திரேலிய போர் கப்பலால் சிட்னி துறைமுகம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது.

    சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய பகுதியான ஐகோர்ட்டு வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. குண்டுவீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

           சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டுவீசிய இடத்தை காட்டும் வகையில்   ஐகோர்ட்டு நீதிபதிகள் குடியிருப்பு வாயிலில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டை படத்தில் காணலாம்

    ‘எம்டன்’ கப்பலுடன் கடலில் மூழ்கி இறந்த 133 வீரர்களின் குடும்பத்தினர் ‘எம்டன்’ என்ற பெயரை தங்களது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் முரடர்களையும், விட்டுக்கொடுக்காதவர்களையும் ‘எம்டன்’ என்று அழைக்கும் வழக்கம் இப்போதும் உள்ளது.

    சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நாளையுடன் (வெள்ளிக்கிழமை) 103 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசியதை நினைவுகூரும் தடயங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. சாதாரண மைல் கல்லைப்போலவே இதற்கான நினைவு கல்வெட்டு தேடிக் கண்டுபிடிக்கும் அவலநிலையில் தான் உள்ளது.

    எனவே தமிழக அரசு ‘எம்டன்’ கப்பல் குண்டுவீசிய இடத்தை அடையாளம் காட்டும் வகையில் புதிதாக நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×