search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கை வாக்கெடுப்பில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்: மு.க.ஸ்டாலின்
    X

    நம்பிக்கை வாக்கெடுப்பில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்: மு.க.ஸ்டாலின்

    எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    திண்டுக்கல்:

    தி.மு.க. சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாள், தி.மு.க. ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நேர்மையாக பணியாற்றிய ஆட்டோ டிரைவர்களுக்கு நற்சான்று, பணமுடிப்பு, பதக்கம் மற்றும் சான்றோர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

    பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர் விருது பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க.வில் 15-வது பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம். புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை இன்று முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்த உள்ளோம்.

    ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் தி.மு.க. நெடுவாசலில் போராட்டம் நடக்கிறது. கதிராமங்கலத்தில் மக்கள் போராடுகிறார்கள். விவசாயிகள் டெல்லியில் சென்று மானத்தை அடகுவைத்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பற்றி இந்த அரசு கவலைப்படுவதோ, சிந்திப்பதோ கிடையாது.

    தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு எப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்பதாக உள்ளது. நாட்டில் அலைந்து கொண்டு இருக்கும் அனாதை தலைவர்கள் நம்மை பார்த்து ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் என்கிறார்கள். தலைவராக வர முடியாதவர் செயல் தலைவராக தான் வர முடிந்தது என்று கூறுகிறார்கள்.

    எந்த பொறுப்பில் இருந்தாலும் என்றைக்கும் தொண்டர்களில் ஒருவனாக இருந்து செயல்பட வேண்டும். இந்த கேள்வியை கேட்கும் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு வந்து சொல்லட்டும், நான் மேடையில் இல்லை, தெருமுனையில் வந்து பதில் சொல்லக் காத்திருக்கிறேன். தயாரா?

    காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் இடத்தில் மத்திய அரசு இல்லை. நீட் தேர்வில் நம்பவைத்து கழுத்தை அறுத்தது. மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணம் யார்? மத்திய, மாநில அரசுகள். அதனால் தான் தற்கொலை அல்ல, கொலை என்று பகிரங்கமாக குற்றம் சொல்கிறோம்.

    முப்பெரும் விழாவில் நாம் அனைவரும் ஓர் உறுதிமொழி ஏற்க வேண்டும். சமூக நீதியை காப்பாற்ற வேண்டும். மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அது தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.

    தமிழகம் என்ற வீட்டை மத்திய அரசுக்கு அடமானம் வைத்தது அ.தி.மு.க. மத்தியில் இருக்கும் ஆட்சி, மாநிலத்தில் இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி இந்த நிலையை உருவாக்கி இருக்கிறது. நான் கேட்கும் கேள்வி, பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் இந்த ஆட்சி எப்படி நீடிக்க முடியும்?

    ஏற்கனவே ஆளும் கட்சியில் இருக்கும் 19 பேர் கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சருக்கு தந்த ஆதரவை திரும்ப பெறுகிறோம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். அதன்பிறகு நாங்கள் கவர்னரை நேரில் சென்று சந்தித்து, வலியுறுத்தி அழுத்தம் கொடுத்தோம்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் கூட்டியபோது அதில் பங்கேற்றவர் 109 பேர். அதே நாளில் தினகரன் குழுவை சேர்ந்தவர்கள் கவர்னரை சந்தித்து 21 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பதாக கூறினர்.

    மீண்டும் தி.முக., காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்தோம். கூறுவதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், விளக்கம் சொல்ல முடியவில்லை. அவருக்கு எங்கிருந்தோ உத்தரவு வருகிறது.

    கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்தை நாடி பலனில்லை என்றால் மக்கள் மன்றத்தை நாடுவோம். ஆட்சியை கவிழ்க்க இல்லை, நாட்டை காப்பாற்ற வேண்டும். இரண்டு, மூன்று நாட்களில் நிச்சயம் நீதிமன்றம் மூலம் நல்ல செய்தி வரும். ஒருவேளை நியாயம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    விழாவில் துரைமுருகன், இ.பெரியசாமி, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×