search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 12-ந் தேதி பா.ம.க. போராட்டம்: அன்புமணி ராமதாஸ்
    X

    சென்னையில் 12-ந் தேதி பா.ம.க. போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, சென்னையில் 12-ந் தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஊரக மாணவர்களின் மருத்துவக் கனவுகளை ‘நீட்’ சிதைத்திருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

    கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் அதிக எண்ணிக்கையில் சேர முடியாததற்கு காரணம் அவர்கள் திறமையற்றவர்கள் என்பது அல்ல. மாறாக, அவர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டதும், தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லாதது தான். இவ்வாறாக தங்கள் தரப்பில் எந்த தவறும், எந்தக் குறையும் இல்லாத நிலையில் கிராமப்புற மாணவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.

    அனிதா போன்ற ஊரக ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் திட்டமிட்டு தட்டிப் பறிக்கப்பட்டுள்ளன. இதற்காகத் தான் ‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தக்கூடாது என பா.ம.க. வலியுறுத்தியது. இப்போது மாணவர்களும், இளைஞர்களும் போராடத் தொடங்கியிருப்பது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால், இதற்காக அனிதாவை பலி கொடுக்க நேர்ந்தது தான் மிகவும் வேதனையளிக்கிறது.

    ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இப்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வரும் 12-ம் தேதி செவ்வாய்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தப்படும். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். அதுமட்டுமின்றி, இச்சிக்கலில் தமிழகத்திற்கு சாதகமாக முடிவு கிடைக்கும் வரை தொடர் போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×