search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் நர்சு படுகொலை: லேப் டெக்னீஷியனிடம் விசாரணை
    X

    திருப்பூரில் நர்சு படுகொலை: லேப் டெக்னீஷியனிடம் விசாரணை

    திருப்பூரில் வீட்டில் இருந்த நர்சு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லேப் டெக்னீஷியனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் பத்மாவதிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சாந்தி (வயது 57). இவர் அவினாசி அரசு மருத்துவமனையில் நர்சிங் சூப்பிரண்டாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் சவுமியா, திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சாந்தி, குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து தனியே வசித்து வந்தார்.

    இன்று காலை சவுமியா, தனது தாய் சாந்திக்கு போன் செய்தார். நீண்ட நேரமாக போன் செய்தும் எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த சவுமியா, பக்கத்து வீட்டில் வசித்தவர்களுக்கு போன் செய்தார். அப்போது தனது தாய் நீண்ட நேரமாக போன் எடுக்க வில்லை. வீட்டில் சென்று பாருங்கள் என்று கூறினார்.

    இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், சாந்தி வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டின் 2-வது மாடி ஜன்னலை திறந்து பார்த்த போது, அங்கு ரத்த வெள்ளத்தில் சாந்தி பிணமாக கிடந்தார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து சவுமியாவுக்கு அவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர்கள் கயல்விழி, பிரபாகரன், உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர்.

    வீட்டில் சாந்தி தனியாக வசித்து வந்ததால் அவரை கொலை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். நகை- பணத்துக்காக யாராவது கொலை செய்தார்களா? அல்லது வேறெதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இந்த கொலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட வில்லை. எனவே தெரிந்த நபர்கள் யாராவது வந்திருக்கலாம் என்றும் அவர்களே சாந்தியை வெட்டி கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதுகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் இன்று காலை சாந்தி வீட்டுக்கு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சாந்தியுடன் பணியாற்றும் லேப் டெக்னீசியன் வடிவேல் (50) என்பவர் வந்ததாக தெரிய வந்தது.

    இதையடுத்து லேப் டெக்னீசியன் வடிவேலை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் சாந்தியை தீர்த்து கட்டினாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என போலீசார் கூறினர்.

    திருப்பூரில் வீட்டில் இருந்த நர்சு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×