search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பிய கொள்ளையன் விபத்தில் பலி
    X

    லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பிய கொள்ளையன் விபத்தில் பலி

    அம்பத்தூர் அருகே மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பிய கொள்ளையன் விபத்தில் பலியானார்.
    வில்லிவாக்கம்:

    தாம்பரத்தில் இருந்து மாதவரத்துக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு லாரி சென்றது. பள்ளிப்பட்டை சேர்ந்த டிரைவர் பெருமாள் லாரியை ஓட்டினார்.

    அம்பத்தூர் அருகே மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் வந்த போது இயற்கை உபாதை கழிப்பதற்காக லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அவர் இறங்கினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பெருமாளை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பினர்.

    சிறிது தூரம் சென்ற போது பதட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் தலையில் காயம் அடைந்த கொள்ளையர்களில் ஒருவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். மற்றொருவன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினான்.

    இதுகுறித்து அம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.

    இதில் பலியானவர் அம்பத்தூர், இந்திரா நகர் சண்முகபுரத்தை சேர்ந்த மணி (22) என்றும் காயம் அடைந்தவன் அதே பகுதியை சேர்ந்த அவனது நண்பன் சூர்யா என்பதும் தெரிந்தது.

    இருவரும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வில்லிவாக்கத்தில் நடனம் கற்று வந்துள்ளனர். உல்லாச வாழ்க்கைக்காக கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. வேறு எங்கேனும் கொள்ளையில் ஈடுபட்டனரா என்று காயம் அடைந்த சூர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×