search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் கொலை - உறவினர்கள் சாலை மறியல்
    X

    திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் கொலை - உறவினர்கள் சாலை மறியல்

    திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி ரெயில்வே பாலம் அருகில் சென்னை-தூத்துக்குடி சாலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த வாலிபர் உடலை பார்வையிட்டனர்.

    வாலிபரின் வயிற்று பகுதியில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்டு, குடல் வெளியே சரிந்து கிடந்தது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் எடையூர் அருகே உள்ள குமரபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகானந்தம் என்பது தெரியவந்தது.

    இந்தநிலையில் கொலை யாளிகளை கைது செய்யக்கோரி முருகானந்தத்தின் உறவினர்கள் மற்றும் குமரபுரம் கிராம மக்கள் திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி-நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை- வேதாரண்யம் சாலைகளில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×