search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண்-சிறுமி பலி
    X

    ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண்-சிறுமி பலி

    ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் மற்றும் சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியம் போதமலையில் உள்ள கெடமலையைச் சேர்ந்தவர் சீரான். விவசாயி. இவரது மனைவி ஆண்டியம்மாள் (வயது 55). கடந்த 10 நாட்களாக ஆண்டியம்மாள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அங்கு சிகிச்சை பெற வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் அவரை போதமலையில் உள்ள கெடமலையில் இருந்து 7 கி.மீ. தொலைவிற்கு கரடு முரடான மலைப்பாதையின் வழியாக தொட்டில் கட்டி புதுப்பட்டிக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அங்கிருந்து ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது உடல் நிலை மோசம் அடைந்திருப்பதாக தெரிவித்ததின் பேரில் அங்கிருந்து புறப்பட்ட நேரத்தில் ஆண்டியம்மாள் இறந்தார்.

    உடனடியாக அங்கிருந்து மெட்டாலா அருகிலுள்ள கார்கூடல் பட்டியில் உள்ள அவரது மகன் பெரியசாமியின் வீட்டுக்கு உடலை கொண்டு சென்றனர்.

    அதேபோல் ராசிபுரம் டவுன் காட்டூர் காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். பாத்திர வியாபாரி. இவரது மகள் புனிதசெல்வி (9). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுமி புனிதசெல்வி கடந்த 3 நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதையொட்டி நேற்று முன்தினம் 16-ந் தேதி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி புனித செல்வி பரிதாபமாக இறந்தாள்.

    போதமலையைச் சேர்ந்த ஆண்டியம்மாள் மற்றும் சிறுமி புனிதசெல்வி இருவரும் மர்மக் காய்ச்சலால் இறந்துவிட்டதாக அவர்களது உறவினர்களும், பொதுமக்களும் தெரிவித்தனர்.

    Next Story
    ×