search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முந்தி செல்வதில் தகராறு: மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு
    X

    முந்தி செல்வதில் தகராறு: மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு

    தண்டையார்பேட்டை அருகே பஸ்சை முந்தி செல்ல முயன்ற தகராறில் மாநகர பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ராயபுரம்:

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மணலி நோக்கி நேற்று இரவு மாநகர பஸ் சென்றது. புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த டிரைவர் பாஸ்கர் பஸ்சை ஓட்டினார். சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

    இரவு 10 மணி அளவில் தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ்சை முந்தி செல்ல முயன்றனர். இதில் பஸ்சின் டிரைவருக்கும் வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி டிரைவருடன் மோதலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவிலை. உடனே 2 வாலிபர்களும் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×