search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மடுகரையில் திருமாவளவன் பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    மடுகரையில் திருமாவளவன் பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    மடுகரையில் திருமாவளவன் வாழ்த்து பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    சேதராப்பட்டு:

    புதுவை மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்தவர் கெங்காதுரை. இவரது மகன் விஜய் (வயது 24). விடுதலை சிறுத்தை கட்சி யின் இளைஞர் அணி பொறுப்பாளராக பதவி வகித்து வந்த இவர், நெட்டப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    திருமாவளவன் பிறந்த நாளையொட்டி இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான அருள்நாத் (24) என்பவரும் நேற்று இரவு மடுகரை- கரியமாணிக்கம் சந்திப்பில் அம்பேத்கார் சிலை அருகே இரும்பு சாரத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாழ்த்து பேனரை வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் பேனர் உரசியதில் விஜய் மற்றும் அருள்நாத் மீது மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக இறந்து போனார். அருள்நாத் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மடுகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×