search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்கள் தர்ம யுத்தத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தரவேண்டும்: க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. பேட்டி
    X

    எங்கள் தர்ம யுத்தத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தரவேண்டும்: க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. பேட்டி

    நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்றது என்றும், எங்கள் தர்ம யுத்தத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தரவேண்டும் எனவும் க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அணிகள் இணைப்பு, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர் க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- அணிகள் இணைப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது என்று அ.தி.மு.க. (அம்மா) அணி நிர்வாகிகள் கூறி உள்ளனரே?

    பதில்:- சசிகலா குடும்பத்தினரை முழுமையாக கட்சியில் இருந்து ஒதுக்குவது, ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலர வைப்பது எனும் 3 குறிக்கோள் எங்கள் தர்மயுத்தத்தில் உள்ளடங்கி உள்ளது. இதில், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்ததை வரவேற்கிறோம். ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை என்பதை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இது நடக்கும் பட்சத்தில் தர்ம யுத்தத்தின் 2-வது முக்கிய குறிக்கோள் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

    கேள்வி:- தமிழக அரசையும், முதல்-அமைச்சரையும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே?

    தமிழக மக்கள் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது தான் கமல்ஹாசன் எண்ணம் என்றால், எங்கள் தர்ம யுத்தத்துக்கு ஆதரவு தரவேண்டும். இதுகுறித்து கருத்து சொல்லவேண்டும். அப்படி செய்தால் தான் தமிழ் சமுதாயத்தை அவர் முழுமையாக பார்ப்பதாக அர்த்தம். அதைவிடுத்து பொதுவாக ஊழல் ஒழியவேண்டும் என்று கூறிவருவது சரியானது அல்ல.

    கேள்வி:- ‘மேலூர் பொதுக்கூட்டத்துக்கு பிறகு உண்மையான அ.தி.மு.க. யார்? என்பது தெரிந்திருக்கும்’, என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாரே?

    பதில்:- ஒரு பொதுக்கூட்டத்தை வைத்துக்கொண்டு கூறிவிட முடியாது. அந்த கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர் என்றே வைத்துக்கொள்வோம். தர்ம யுத்தம் தொடங்கி 18 இடங்களில் நாங்கள் பொதுக்கூட்டம் நடத்திவிட்டோம். எனவே மேலூர் பொதுக்கூட்டத்தை பெரிய சாதனையாக நினைக்கவில்லை. ‘கூட்டத்தை பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கூட்டத்தில் ஒரு சதவீதம் கூட பெண்கள் கிடையாது.

    கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று தொண்டர்களின் மனநிலையை பிரதமரிடம் தெரியப்படுத்தவேண்டியதன் அவசியம் என்ன?

    பதில்:- ஓ.பன்னீர்செல்வம் மீது அன்பும், மரியாதையும், நட்பும் கொண்டவர் பிரதமர் மோடி. இந்தியாவின் 3-வது பெரிய கட்சியான அ.தி.மு.க.வின் 90 சதவீத தொண்டர்களின் தலைவராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து, தொண்டர்களின் மனநிலையை பிரதமர் கேட்பதில் தவறில்லை. ‘நீட்’ தேர்வில் விலக்கு தர மத்திய அரசு முன்வருவதற்கு காரணமே ஓ.பன்னீர்செல்வம் தான். ஓ.பன்னீர்செல்வம் போல வேறு யாரையும் அழைத்து தமிழக அரசியல் நிலவரம் பற்றி பிரதமர் பேசியதும் இல்லை. இந்த நட்பு, மரியாதை, மரியாதை கலந்த உறவு தமிழகத்துக்கு கிடைத்த வரம்.

    சொந்த விஷயங்கள் பற்றி பேசாமல், தமிழக நலன்கள் பற்றி மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பிரதமரிடம் பேசிவருவதாக விஷமத்தனமான கருத்து பரப்பப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க. அணிகள் இணைந்தால் தமிழக மக்களுக்கு நல்லது என்று பொதுவான கருத்தைத்தான் பிரதமர் முன்வைக்கிறார். எங்களை பொறுத்தவரை இணைப்பு தேவை தான். அதேநேரத்தில் இந்த இணைப்பு தர்மயுத்த கோரிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் இருக்கக்கூடாது.

    கேள்வி:- உங்கள் அணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

    பதில்:- தர்மயுத்தத்தின் அடுத்த கட்டமாக 28-ந் தேதி கடலூரில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 19-ந் தேதி புதுக்கோட்டையில் நடக்க இருந்த கூட்டமும் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும்.

    கேள்வி:- சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா?

    பதில்:- இரு அணிகளும் பிரிந்த சமயத்தில் சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி தேர்தல் வந்தால் மக்கள் குழப்பம் அடைவார்கள். இரு அணிகளும் இணைவதில் இணக்கமான சூழல் உள்ளதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்றது. நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவரப்போவது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×