search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
    X

    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

    திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து மாலை வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கு முடிந்து செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்ட நிலையில் வீடு திரும்பினார். கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் கடந்த 7 மாதங்களாக ஓய்வு பெற்று வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வந்தது.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இன்று காலை 6.30 மணியளவில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராசாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, ’சாதாரண பரிசோதனைக்காகவே தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டிருந்த செயற்கை உணவுக்குழாய் மாற்றப்படுகிறது’ என்றார்.

    மேலும் காவிரி மருத்துவனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக் குழாய் மாற்றப்படுகிறது. இது சாதாரண மருத்துவ பரிசோதனை தான். மருத்துவமனையில் இருந்து இன்று மாலைக்குள் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×