search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.வி.குப்பம் அருகே வாலிபர் கொலை
    X

    கே.வி.குப்பம் அருகே வாலிபர் கொலை

    கே.வி.குப்பம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் இளவரசன் (வயது 25). இவருடைய மனைவி காவியா. இருவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இருவரும் மாதனூரில் உள்ள தனியார் காலணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இளவரசனுக்கு 18 வயதில் தம்பி ஒருவர் உள்ளார். அவர், தற்போது ஐ.டி.ஐ. படித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளவரசனின் தம்பி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கே.வி.குப்பத்தை அடுத்த சின்னநாகல் மங்கானிப்பட்டியைச் சேர்ந்த நடராஜன் (35) என்பவர் தனது மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    ஓரிடத்தில் இருவரும் கடந்து சென்றபோது மோட்டார்சைக்கிளும், சைக்கிளும் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டன. அதில் ஆத்திரம் அடைந்த நடராஜன் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு வந்து, இளவரசன் தம்பியின் கழுத்தில் கத்தியை வைத்து, என்னுடைய மோட்டார்சைக்கிளை இடித்து விட்டு செல்கிறாயா? எனக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    அதில் பயந்துபோன இளவரசனின் தம்பி நேராக வீட்டுக்கு வந்து, தனக்கு நேர்ந்த சம்பவத்தை பெற்றோரிடமும், அண்ணன் இளவரசனிடமும் கூறினார்.

    இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் இளவரசன் மற்றும் அவரின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ரஜினி (40) மற்றும் நண்பர்கள் நவீன், அரவிந்த் ஆகிய 4 பேரும் 2 மோட்டார்சைக்கிள்களில் மங்கானிப்பட்டிக்கு அருகே உள்ள ஒரு மதுபானக்கடைக்கு சென்றுள்ளனர்.

    அதே மதுபானக்கடையில் இருந்து நடராஜன் தனது நண்பருடன் வெளியே வந்துள்ளார். அப்போது இளவரசன், நடராஜனிடம் சென்று, ‘என்னுடைய தம்பியிடம் ஏன் தகராறு செய்தாய்’? என தட்டி கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரம் அடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளவரசனின் முதுகில் சரமாரியாக குத்தினார். அப்போது நடராஜனை தடுக்க முயன்ற ரஜினியின் நெஞ்சிலும், தாடையிலும் கத்திக்குத்து விழுந்தது.

    ரத்த வெள்ளத்தில் விழுந்த இருவரையும் நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு, இளவரசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட அவர்களுடைய உறவினர்கள் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பதட்டம் அதிகரித்தது. அங்கு, அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயகுமார், தன்ராஜ், சுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து இளவரசனின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரஜினியும், அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மக்களிடையே பதற்றத்தை தணிக்கவும் கெம்மங்குப்பம், சின்னநாகல் மங்கானிப்பட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு பகலவனும் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பையா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இளவரசனை கத்தியால் குத்திக் கொலை செய்த நடராஜன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மங்கானிப்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற இளம்பெண்ணை கொலை செய்தது தொடர்பாக சிறைக்கு சென்றவர்.

    தற்போது அவர் மீண்டும் ஒரு கொலையை அரங்கேற்றி உள்ளார். அவரை, பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×