search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் பகுதியில் மழை எதிரொலி: நீர்நிலைகளுக்கு நீர்வரத்து தொடக்கம்
    X

    பெரம்பலூர் பகுதியில் மழை எதிரொலி: நீர்நிலைகளுக்கு நீர்வரத்து தொடக்கம்

    பெரம்பலூர் பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு நீர் வரத்து தொடங்கியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் ஓரளவு மழை பெய்தது. இதனால் புழக்கத்திற்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைத்தது. ஜூலை மாதத்தில் ஒருமுறை மழை பெய்தது. வரலாறு காணாத வறட்சியை சந்தித்த பெரம்பலூர் நகருக்கு தற்போது தெருக்குழாய்களில், புழக்கத்துக்கான தண்ணீர் வினியோகம் செய்வதை நகராட்சி நிர்வாகம் அதிகரித்து வருகிறது. காவிரி குடிநீரும் 5-7 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி பலத்த மழைபெய்தது. அதனைத்தொடர்ந்து 6-ந்தேதி சாரல்மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு இடிமின்னலுடன் 2 மணிநேரம் பலத்த மழையும் பெய்தது. பலத்த மழை காரணமாக துறைமங்கலம் பெரிய ஏரிக்கு மருதையாற்றில் இருந்து வாய்க்கால் மற்றும் இதர வாய்க்கால் வழியாக நீர்வரத்து தொடங்கியது. மேலும் இந்த ஏரியில் சமீபத்தில் தூர்வாரி சீரமைத்துள்ளதால் தற்போது தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த மழை இன்னும் சில தினங்களுக்கு நீடித்தால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிர்விளைச்சல் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பெரம்பலூர்- 64, பாடாலூர்- 62, செட்டிக்குளம்-50, வேப்பந்தட்டை-6, தழுதாழை- 6.
    Next Story
    ×