search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னசேலம் அருகே தகராறை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை
    X

    சின்னசேலம் அருகே தகராறை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை

    சின்னசேலம் அருகே தகராறை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தாசமுத்திரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகாயி (27). இவர்களுக்கு தினேஷ் (12) என்ற மகனும், திரிஷா (9) என்ற மகளும் உள்ளனர்.

    அண்ணாமலையின் மாமனார் ராமசாமி (48). இவரும் அதே ஊரில் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கூலிதொழிலாளி வெங்கடேசன் (37) என்பவருக்கும் இடையே வீட்டுமனை பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்துவந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவும் ராமசாமிக்கும், வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அண்ணாமலை ஏன் என் மாமனாரிடம் அடிக்கடி தகராறு செய்கிறாய் என்று தட்டிக்கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணாமலையின் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அண்ணாமலை அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். கொலை செய்யப்பட்ட அண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் தப்பி ஓடிவிட்ட வெங்கடேசனை பிடிக்க கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீம ராஜ் 3 தனிப்படை அமைத்துள்ளார். இந்த தனிப்படையினர் தலைமறைவாகி விட்ட வெங்கடேசனை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×