search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
    X

    ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து, ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நாடு முழுவதும் கடந்த 1–ந் தேதி மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சியினர், வியாபாரிகள், வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அதுபோல நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜீவ் காந்தி ரவுண்டான பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மதியம் திரண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பெள்ளி தலைமையில், அதன் நிர்வாகிகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் போஜராஜ், ரகு, மோர்சா, ஆரி உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 25 பேரை கைது செய்தனர்.

    இது குறித்து மாவட்ட செயலாளர் பெள்ளி கூறியதாவது:–

    மத்திய அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியின் மூலம் ஜவுளி, கைத்தறி உள்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக மாணவர்களை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘நீட்’ தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு காலம் தாழ்த்தக்கூடாது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை கைவிட வேண்டும். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை பாலைவனமாக மாறும் வகையில் விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×