search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலை சந்தையில் வாழை குலை விலை கடும் உயர்வு
    X

    தக்கலை சந்தையில் வாழை குலை விலை கடும் உயர்வு

    தக்கலை சந்தையில் வாழை குலைகளின் விலை உயர்வு விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் நெற்பயிருக்கு அடுத்தப்படியாக வாழை பயிர்களே அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதாலும், போதுமான தண்ணீர் இல்லாததாலும் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சாகுபடி செய்த பயிர்கள் பலன் தருமா? என்றும் முழுவதுமாக விளைந்து சந்தையில் வியாபாரத்திற்கு வருமா? என்ற கலக்கத்திலும் உள்ளனர்.

    ஆனாலும் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகள் சிலர் இப்போதும் தங்கள் நிலங்களில் வாழை மரங்களை பயிரிட்டு அவற்றிற்கு கிணற்று நீர் இறைத்து காப்பாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வாழை குலைகள் பெரும்பாலும் குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் மற்றும் தக்கலை சந்தைகளிலேயே விற்பனைக்கு வரும். குறிப்பாக தக்கலை பேட்டையில் உள்ள வாழை குலை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் மற்றும் மும்பை, பூனா போன்ற பெரு நகரங்களில் இருந்து வியாபாரிகள் வாழை குலைகள் வாங்க வருவார்கள். குறைந்த விலையில் தரமான வாழை குலைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இங்கு வருவது வழக்கம்.

    அதற்கேற்ப இங்கு வாழை குலை விலை எப்போதும் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஆரம்பம் முதலே இங்கு விற்பனை ஆகும் வாழை குலைகள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இது பற்றி இங்குள்ள வாழை குலை வியாபாரிகள் கூறியதாவது:-

    ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இச்சந்தையில் ஏத்தன் வாழை குலைகள் அதிக அளவு விற்பனைக்கு வரும். இதனால் அவற்றின் விலை குறையும். இப்போது உற்பத்தி குறைந்து விட்டதால் விலை உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ நேந்திரன் பழம் கிலோ ரூ.55-க்கு விற்பனை ஆகிறது. ரசகதலி பழம் இதை விட அதிகமாக கிலோ ரூ.65-க்கு விற்கப்படுகிறது. சிவப்பு தொழுவன் பழம் கிலோ ரூ.50-வரை விற்பனை ஆகிறது.

    இந்த விலை உயர்வு கேரளாவில் ஓணப்பண்டிகை முடியும் வரை நீடிக்கும். செப்டம்பர் மாதம் 4-ந் தேதி ஓணப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்பின்பே வாழை குலையின் விலை குறையும். இங்கு சீசன் முடியும்போது நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் சீசன் தொடங்கும். என்றாலும் விலை ஒரே சீராக இருக்கும். உற்பத்தி அதிகரித்து விளைச்சலும் கூடும் போது மட்டுமே பழங்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். வாழை குலைகளின் விலை உயர்வு விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தக்கலை பேட்டை சந்தையில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×