search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்புரவு பதவிக்கான விளம்பரத்தை தமிழில் வெளியிட கோரி வழக்கு: ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நோட்டீசு
    X

    துப்புரவு பதவிக்கான விளம்பரத்தை தமிழில் வெளியிட கோரி வழக்கு: ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நோட்டீசு

    துப்புரவு பதவிக்கான விளம்பரத்தை தமிழில் வெளியிட கோரிய வழக்கில் ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டுக்கு 129 துப்புரவு தொழிலாளர்கள் பணி இடங்களை நிரப்ப ஐகோர்ட்டு நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளம்பரம் செய்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் கல்வித் தகுதி 8ம் வகுப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வித் தகுதியுள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், சென்னை ஐகோர்ட்டு, தலைமை பதிவாளர், இந்த பணிக்கான விளம்பரத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதனால், தகுதியுள்ள நபர்கள் பலருக்கு, இந்த விவரம் தெரியாமல் போய்விடும். மேலும், இந்த விளம்பரத்தின் அடிப்படையில் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்வார்கள். அவர்கள் துப்புரவு தொழிலாளர் பணிக்காக ஐகோர்ட்டுக்குள் நுழைந்து விட்டு, அதன்பின்னர் சட்ட விரோதமாக 3 பதவி உயர்வுகளை ஒரே நேரத்தில் பெற்று, உயர் பதவிக்கு சென்று விடுவார்கள். இதனால், துப்புரவு தொழிலாளர் பணியிடங்கள் மீண்டும் காலியாகி விடும்.

    எனவே, துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழில் விளம்பரம் வெளியிட உத்தரவிடவேண்டும். ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் நேர்முக தேர்வு நடத்த தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதா கிருஷ்ணன் ஆஜராகி, ‘துப்புரவு பணிக்கான விளம்பரத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதால், அந்த பதவிக்கு தகுதியான நபர்களுக்கு அதுகுறித்த விவரம் தெரியாமல் போய்விடும்’ என்று கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சார்பில் ஆஜரான வக்கீல் காஜா மொய்தீன் கிஸ்தி, ‘ஐகோர்ட்டின் அலுவல் மொழி ஆங்கிலமாகும். எனவே, ஆங்கில மொழியில் விளம்பரம் செய்யப்பட்டது’ என்று கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் அதிகம் படித்தவர்களா இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வார்கள்? சரி துப்புரவு பணிக்கான நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் நடக்குமா? தமிழில் நடக்குமா?’ என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சக்தி வேலுவுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
    Next Story
    ×