search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாம்பாக்கம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 8-ம் வகுப்பு மாணவி பலி
    X

    மாம்பாக்கம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 8-ம் வகுப்பு மாணவி பலி

    மாம்பாக்கம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8-ம் வகுப்பு மாணவி பலியானார். மேலும் 12 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
    கூடுவாஞ்சேரி:

    ஊரப்பாகத்தை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் நேத்ராஸ்ரீ (வயது 13). மாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கை ரோஷினி (9).

    அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை அக்காள்- தங்கை இருவரும் பள்ளி வேனில் சென்றனர். உடன் மேலும் 11 மாணவிகள் இருந்தனர்.

    மாம்பாக்கத்தை அடுத்த வெங்கம்பாக்கம் கூட்டு ரோடு அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை வேன் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி மீது திடீரென வேன் உரசியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் மாணவி நேத்ராஸ்ரீ பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தங்கை ரோஷினி உள்பட 12 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மாணவிகளையும், வேன் டிரைவரையும் மீட்டு மாம்பாக்கம், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் டிரைவரிடம் தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×