search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவன்
    X

    மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவன்

    திருக்கோவிலூர் அருகே மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 43), கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (38). இவர்களுக்கு காயத்ரி (13), சுமித்ரா (8) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    அய்யப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி லட்சுமியிடம் தகராறு செய்தார்.

    இதனால் கணவன்- மனைவிக்கிடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அய்யப்பனின் 2 மகள்களும் அதே பகுதியில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்று விட்டனர்.

    மாலையில் அய்யப்பன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதைப்பார்த்த லட்சுமி கோபம் அடைந்தார். அய்யப்பனிடம், தினமும் ஏன் குடித்து விட்டு வருகிறீர்கள்? நீங்கள் உழைத்து வரும் பணத்தை குடித்தே அழித்து விடுகிறீர்கள். குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது என்று கூறி கண்டித்தார்.

    இதை கேட்டு அய்யப்பன் ஆத்திரம் அடைந்து மனைவி லட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென்று அங்கு கிடந்த கல்லால் லட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் லட்சுமிக்கு தலை மற்றும் கை-கால்களில் காயங்கள் ஏற்பட்டது. உடனே அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இதையறிந்த அய்யப்பன் வீட்டில் இருந்த போர்வையை எடுத்து லட்சுமியின் உடலில் சுற்றி கட்டினார். உடலை தூக்கி வீட்டின் முன்பு இருந்த குடிநீர் குழாய் அருகே போட்டார்.

    பின்னர் அங்கிருந்து அய்யப்பன் தப்பி ஓடிவிட்டார். இன்று காலை பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக அந்த குழாய் அருகே வந்தனர் அப்போது போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் லட்சுமி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அரகண்ட நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய அய்யப்பனை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×