search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
    X

    தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

    தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அல்போன்ஸ் பாத்திமாநகரில் உள்ள பி.வி.ஆர்.புரத்தை சேர்ந்த மீனவர் லசிங்டன் (வயது33). இவரது மனைவி லூர்தி. இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லூர்தி, கணவரிடம் கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். லசிங்டன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்று மாலை லசிங்டன் பெற்றோரிடம் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார். இன்று காலை வெகுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கழிப்பறை முன்பு லசிங்டன் தலை சிதைக்கப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் ஏ.எஸ்.பி. செல்வ நாகரத்தினம், தென்பாகம் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் லசிங்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து லிசிங்டனை கொன்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லசிங்டனை அவரது மனைவி பிரிந்து சென்றதால், மனைவியின் சகோதரர் மேன்சன் என்பவருக்கும், லசிங்டனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் லசிங்டன் கொல்லப்பட்டிருப்பதால் மேன்சன் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை போலீசார் தேடி சென்ற போது மேன்சன் தலைமறைவானது தெரிய வந்தது. அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×