search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரப்பன அக்ரஹார சிறைக் காட்சிகள் திரைப்படங்களை மிஞ்சிய கிராபிக்ஸ்: புகழேந்தி
    X

    பரப்பன அக்ரஹார சிறைக் காட்சிகள் திரைப்படங்களை மிஞ்சிய கிராபிக்ஸ்: புகழேந்தி

    பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக சில வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அந்த காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என அ.தி.மு.க கர்நாடக மாநில செயலளர் புகழேந்தி கூறியுள்ளார்.
    சென்னை:

    பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக சில வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அந்த காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என அ.தி.மு.க கர்நாடக மாநில செயலளர் புகழேந்தி கூறியுள்ளார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளூர் ஊடகங்களில் சில புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகின.

    சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் நைட்டியுடன் வலம் வரும் வீடியோ வெளியானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் சசிகலா சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு ஷாப்பிங் பையுடன் சிறை வளாகத்தில் நடமாடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    சசிகலாவின் பின்னால் இளவரசியும் செல்வது அந்த காட்சியில் தெரிகிறது. சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் செல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    இந்நிலையில், அ.தி.மு.க (அம்மா) அணியின் கர்நாடக மாநில பொது செயலாளர் புகழேந்தி சென்னை அடையாறில் உள்ள தினகரனை சந்தித்து பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சசிகலா பற்றி குற்றச்சாட்டுக்களை முன் வைத்த டி.ஐ.ஜி ரூபாவைப் பற்றி பரபரப்புக் புகார் கூறினார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனது துறை ரீதியான பிரச்சினையிலிருந்து தப்பிக்க சசிகலா பெயரை ரூபா பயன்படுத்தியுள்ளார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட 2 மெமோக்களில் இருந்து தப்பிக்கவே சசிகலாவின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார். சசிகலா பயன்படுத்தியதாக சமூகவலைத்தளத்தில் வெளியான அறையின் புகைப்படங்கள் பொய்யானது. அது பாகுபலி கிராபிக்ஸை மிஞ்சும் வகையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டு உள்ளது.

    சட்டப்படி சிறையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அது தவிர சசிகலாவிற்கு கூடுதலாக ஒன்றும் கொடுக்கப்படவில்லை. அப்புறம் எப்படி அவர் அங்கு சமைக்க முடியும். நியாயம் இல்லாமல், இதயம் இல்லாமல் இப்படி பேசுகிறார்கள். சசிகலா 20 ஆண்டுகள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். 63 வயதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரால் நிறைய சாப்பிட முடியாது. அவர் கொஞ்சம் தான் சாப்பிடுவார். இவரைப் பற்றி தொடர்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும்.

    சசிகலா தொடர்பான வீடியோவை கொண்டு வாருங்கள். அதனைப் பொய் என்பதை நான் நிரூபிக்கின்றேன். அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரிய வேண்டும். பரப்பன அக்ரஹாரா சிறை 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தில் எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×