search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரில் இருந்து வெளியேறி தோப்பில் குடியேறிய கதிராமங்கலம் கிராம மக்கள்
    X

    ஊரில் இருந்து வெளியேறி தோப்பில் குடியேறிய கதிராமங்கலம் கிராம மக்கள்

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலம் கிராம மக்கள் ஊரில் இருந்து வெளியேறி தோப்பில் குடியேறினார்கள்.
    திருவாலங்காடு:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீரில் எண்ணெய் படலம் கலந்துள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

    போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரியும் கதிராமங்கலத்தில் நேற்றுடன் 11-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதைப்போல திருவிடைமருதூர், பந்தநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் தங்கள் ஊரில் இருந்து வெளியேறி அங்குள்ள அய்யனார் கோவில் தோப்பில் குடியேறினர். அங்குள்ள மரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி தூங்க வைத்தனர். அங்கு விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் போராட்டத்தை மத்திய-மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. மண்வளம், மக்கள் வளம் உள்ள இந்த பகுதியில் கச்சா எண்ணெய் ஆய்வு தேவையில்லை. கியாஸ் அடுப்பு இல்லாமலும் எங்களால் சமைக்க முடியும் என்பதை ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்துக்கு தெரிவிக்கவே விறகு அடுப்பில் சமைக்கிறோம்.

    கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×