search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை
    X

    பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை

    பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில், பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பொருட்டும், 11-வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துதல் சார்ந்தும் தமிழக அரசால் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதனைத் தொடர்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது.

    இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் பங்குபெற ஆர்வம் தெரிவிக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் ( www.tnscert.org) விவரங்களை 23-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

    தற்போது இப்பணிக்காக பதிவு செய்வதற்கான காலம் ஜூலை 2-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் ஆர்வலர்கள், இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த, பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டச் சீரமைப்பு அறிக்கைகள் (கோத்தாரி குழுவின் அறிக்கை, தேசியக் கலைத்திட்ட வரைவு 2005 மற்றும் புதிய கல்விக்கொள்கை (வரைவு) 2017-18), ஆகியவற்றில் கருத்துச் செறிவு பெற்றிருத்தல் நலம். ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பணியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×