search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே பஸ் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலி
    X

    விக்கிரவாண்டி அருகே பஸ் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலி

    விக்கிரவாண்டி அருகே நின்றுகொண்டிருந்த பஸ் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.
    விக்கிரவாண்டி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் சிவமுருகன்(வயது 40) இவரும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசேகர்(45), விஜய்(29), முத்துக்குமார்(45) ஆகியோர் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவதையொட்டி அதற்கு காணிக்கை வசூல் செய்தவதற்காக உடன்குடியிலிருந்து சென்னைக்கு வேனில் புறப்பட்டனர்.

    வேனை ஸ்ரீராம் என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அருகே உள்ள ஒரத்தூர் கூட்டுரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அங்கு நின்று கொண்டிருந்த அந்த பஸ்சின் பின்னால் ஸ்ரீராம் ஓட்டி வந்த வேன் திடீரென்று மோதியது. இதில் வேன் முற்றிலுமாக சேதமடைந்தது.

    வேனில் பயணம் செய்த சிவமுருகன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேனின் இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவசேகர், விஜய், முத்துக்குமார், ஸ்ரீராம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சிவசேகர் பரிதாபமாக இறந்தார்.

    விஜய், முத்துக்குமார், ஸ்ரீராம் ஆகிய 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×