search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்ட்ரலில் இன்று காலை கணவனுடன் வந்த பெண்ணிடம் 28 பவுன் நகை பறிப்பு
    X

    சென்ட்ரலில் இன்று காலை கணவனுடன் வந்த பெண்ணிடம் 28 பவுன் நகை பறிப்பு

    சென்ட்ரலில் இன்று காலையில் கணவனுடன் வந்த பெண்ணிடம் 28 பவுன் நகை பறித்து சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் கன்னிரத்தினம். இவரது மனைவி ஜெயராணி (55). இவர்களின் மகள் புதுச்சேரியில் உள்ளார்.

    மகளை பார்ப்பதற்காக சென்னை எழும்பூரில் இருந்து ரெயில் மூலம் புதுவை செல்ல கன்னிரத்தினமும், ஜெயராணியும் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

    இன்று காலை 6 மணியளவில் அவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகேயுள்ள சிக்னல் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 கொள்ளையர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன் ஜெயராணி கழுத்தில் கிடந்த 28 பவுன் நகையை பறித்தான். பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

    நகையை பறித்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெயராணியும், கன்னிரத்தினமும் கீழே விழுந்தனர். இதில் ஜெய ராணிக்கு கால் முறிந்தது. கன்னிரத்தினமும் காயம் அடைந்தார். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போட்டு பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×