search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியாங்குப்பத்தில் அரசு ஊழியர் அடித்துக்கொலை: மனைவி ஆத்திரம்
    X

    அரியாங்குப்பத்தில் அரசு ஊழியர் அடித்துக்கொலை: மனைவி ஆத்திரம்

    அரியாங்குப்பத்தில் மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவரை மனைவியே அடித்துக்கொன்றார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் மாஞ்சாலைரோடு அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் இசைமணி (வயது45). இவர் புதுவை அரசின் சமூகநலத்துறையில் வாகன டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (41). இவர்களுக்கு இளஞ்செழியன் (23), இசைவேந்தன் (21) ஆகிய 2 மகன்கள்.

    மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இசைமணி தினமும் இரவு மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம் அதுபோல் நேற்று இரவு இசைமணி மதுகுடித்துவிட்டு மனைவி கோமதியிடம் தகராறு செய்தார். நள்ளிரவு 12 மணி வரை இந்த தகராறு நீடித்தது.

    ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கோமதி ஆவேசம் அடைந்து வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்து இசைமணியின் பின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் இசைமணி மயங்கி சரிந்தார். இதையடுத்து கணவர் தூங்கி விட்டதாக கருதி கோமதி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தூங்கினார்.

    அதிகாலை 3 மணியளவில் சந்தேகம் அடைந்த கோமதி மாடியில் இருந்து இறங்கி வந்து பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் கணவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரத்தில் செய்த தவறை எண்ணி கோமதி கதறி அழுதார். இந்த அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    பின்னர் இதுபற்றி அரியாங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ரஹீம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோமதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கணவரை மனைவியே அடித்துக்கொன்ற சம்பவம் அரியாங்குப்பத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராம்பட்டினம் கடலில் சுற்றுலா பயணிகள் குளித்தபோது அவர்கள் கடல்அலையில் சிக்கினர். அப்போது இசைமணியின் இளையமகன் இசைவேந்தன் காப்பாற்ற முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக இசைவேந்தன் கடலில் முழ்கி இறந்து போனார் என்பது குறிப்படத்தக்கது.

    Next Story
    ×