search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘மறக்க முடியவில்லையே...’ ராஜீவை நினைத்து மேடையில் கண்ணீர் விட்ட ப.சிதம்பரம்
    X

    ‘மறக்க முடியவில்லையே...’ ராஜீவை நினைத்து மேடையில் கண்ணீர் விட்ட ப.சிதம்பரம்

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 26-வது நினைவு தின பொதுக்கூட்டத்தில் ராஜீவை நினைத்து மேடையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச முடியாமல் கண்ணீர் விட்டார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 26-வது நினைவு தின பொதுக்கூட்டம் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்திய மூர்த்தி பவனில் நடந்தது.

    மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு ராஜீவுக்கு புகழஞ்சலி செலுத்தினார். அவர் பேசியதாவது:-

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்ததைவிட பிரதமராக இல்லாத நேரத்தில் அவருடன் அதிக நேரம் இருந்திருக்கிறேன். இன்று உங்களை சுற்றி பார்க்கும் பல காட்சிகள், தொலைக்காட்சி, கணினி, கைபேசி, தடுப்பூசி, அரசு செயலாளர்களுக்கு இணையாக கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம், அனைத்தும் அவர் கொண்டு வந்தது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் அவர் கொண்டு வந்த யுகப்புரட்சி. இப்போது அதை முடக்க பார்க்கிறார்கள்.

    எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சமாதான பிரியர். சமாதானத்தை நேசித்ததில் போப் ஜானுக்கு பிறகு ராஜீவ் ஒருவர்தான் உலக அளவில் உயர்ந்து நிற்பவர்.

    இந்தியா வல்லரசாக வேண்டும் என்று விரும்புகிறோம். 2 அணு ஆயுதங்கள் இல்லாமல் ஒரு நாட்டை வல்லரசு நாடாக உலகம் ஏற்காது. அதனால்தான் இந்திராகாந்தி அணுகுண்டு சோதனை நடத்தினார். அதன் பிறகுதான் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா சேர்ந்தது.

    ராஜீவ் நினைத்து இருந்தால் அணு ஆயுதங்களை குவித்து இருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. ஒரு அணுகுண்டு சோதனை கூட நடத்தியது கிடையாது. இந்தியாவின் பலம் அவருக்கு தெரியும். அணு ஆயுத ரகசியம் பிரதமர் உள்பட 4 மந்திரிகளுக்கு மட்டும் தெரியும்.

    ஆனால் அவர் விரும்பியது உலகம் முழுவதும் சமாதானம் வேண்டும் என்பதுதான். பஞ்சாப், காஷ்மீர், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் சமாதான உடன்பாடு மேற்கொண்டார். அசாமில் போராடிய மாணவர் இயக்கத்துக்கு ஆட்சியை விட்டுக் கொடுத்தார்.

    அவர் மேற்கொண்ட இன்னொரு சமாதான முயற்சியால், எந்த இனம் எல்லா உரிமைகளோடும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று பாடுபட்டாரோ அதே இனத்தால் அவரது உயிர் பறிக்கப்பட்டது.

    அந்த சமாதான முயற்சியின் போது ஆபத்தும் இருக்கிறது என்பதை அவர் அறியாமல் இல்லை. அதுபற்றி அவரிடம் நான் கூறிய போது, ‘நான் ஆபத்தை பற்றி கவலைப்படவில்லை. எப்பாடுபட்டாவது இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

    சமாதான தூதுவர்கள் கொல்லப்படுவது புதிதல்ல. ஆபிரகாம்லிங்கன், மகாத்மா காந்தி, கென்னடி போன்றோர்கள் கொல்லப்பட்டார்கள். ராஜீவும் சமாதான தூதராக இருந்ததால்தான் கொல்லப்பட்டார்.

    இலங்கை தமிழின மக்களுக்காக மேற்கொண்டு வரும் சமாதான முயற்சியில் இருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் என்று இருந்தார். சமாதானம் ஏற்பட்டு விடும் என்று அஞ்சியவர்கள்தான் அவரது உயிரை பறித்து விட்டார்கள்.

    (இப்படி கூறியதும் பேச முடியாமல் கண்ணீர் விட்டார்)

    நாட்டில் இன்று அமைதி நிலவுகிறதா? காஷ்மீரில் 2014-ல் 47 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள். 2015-ல் 39 பேர், 2016-ல் 82 பேர், இந்த ஆண்டு இதுவரை 15 பேரை இழந்திருக்கிறோம். எதற்காக இந்த உயிர் பலிகள்? யாருக்காக இந்த ராணுவ வீரர்கள் இறக்கிறார்கள்?

    அமைதி, நல்லுணர்வு, ஒற்றுமை, இருக்கும் சமுதாயத்தில்தான் பொருளாதாரம் வளரும். அனைத்து துறைகளும் வளர்ச்சி அடையும்.

    சமாதானத்தை விரும்புபவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று பைபிள் சொல்கிறது. அந்த வகையில் சமாதானத்தை நேசித்து வாழ்ந்த ராஜீவும் கடவுளின் குழந்தை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக சீர்காழி சிவசிதம்பரம் ராஜீவுக்கு இசை அஞ்சலி செலுத்தினார்.

    கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, வசந்த குமார், வள்ளல் பெருமான், சிரஞ்சீவி, ஹசீனா சையத், ஜான்சிராணி, கீழானூர் ராஜேந்திரன், ரூபி மனோகரன், தி.நகர் ஸ்ரீராம், எம்.எஸ்.திரவியம், பட்டுக் கோட்டை ராஜேந்திரன், அருள்பெத்தையா, எஸ்.எஸ்.பி. சசிகுமார், தணிகாசலம், திருவான்மியூர் மனோகரன், துறைமுகம் ரவிராஜ், மத்திய சென்னை மாவட்ட தலைவர் பிரபு, மலர்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வடசென்னை காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×