search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனை அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
    X

    திருபுவனை அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

    திருபுவனை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் லோகு. எலக்ட் ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (வயது32).  இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் கலிதீர்த்தாள்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கணவன்- மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லோகு வீட்டு வராண்டாவிலும், கலைவாணி படுக்கை அறையிலும் தூங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லோகு கதவை உடைத்து பார்த்தார்.

    அப்போது கலைவாணி கழுத்தில் கயிறு மற்றும் புடவையுடன் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற போது பாரம் தாங்காமல் கயிறு மற்றும் சேலை அறுந்து போனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கலைவாணிக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் தாசில்தாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பாகூர் பழைய காமராஜ் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 45). கூலித்தொழிலாளி.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டிட பணிக்காக சாரம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக புருஷோத்தமன் தவறி விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
    பின்னர் வீடு திரும்பிய புருஷோத்தமனுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட புருஷோத்தமன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×