search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்குன்றத்தில் காவலாளி வெட்டிக்கொலை
    X

    செங்குன்றத்தில் காவலாளி வெட்டிக்கொலை

    செங்குன்றத்தில் வீட்டு வாசலில் காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பாரத் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). காந்தி நகரில் உள்ள தனியார் வாட்டர் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கல்பனா.

    நேற்று இரவு சண்முகம் காற்றுக்காக வீட்டு வாசலில் தூங்கினார். வீட்டில் அவரது மனைவி கல்பனா மற்றும் மகன் அந்தோணி இருந்தனர்.

    இன்று அதிகாலை கல்பனா வெளியே வந்தபோது ரத்த வெள்ளத்தில் கணவர் சண்முகம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து, முகத்தில் பலத்த வெட்டு காயம் இருந்தது.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் சண்முகம் தூக்கத்தில் இருந்த போதே வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி இருப்பது தெரிந்தது.

    இது குறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மண்டல இணை கமி‌ஷனர் பாஸ்கர், துணை கமி‌ஷனர் ராஜேந்திரன், உதவி கமி‌ஷனர் லிங்க திருமாறன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

    சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து சண்முகத்திடம் மோதலில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? அவருக்கு வேறு யாருடனும் தகராறு உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டு வாசலில் காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×