search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனை விசாரணைக்காக இன்று பெங்களூர் அழைத்துச் செல்லும் டெல்லி போலீசார்?
    X

    தினகரனை விசாரணைக்காக இன்று பெங்களூர் அழைத்துச் செல்லும் டெல்லி போலீசார்?

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான டி.டி.வி.தினகரனை இன்று விசாரணைக்காக பெங்களூர் அழைத்துச் செல்ல டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவையடுத்து தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு வருமாறு அவருக்கு நேரில் சம்மன் அளித்தனர்.

    இதனை ஏற்று விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் கடந்த 24-ந்தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். 2 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் மோசடி மன்னன் சுகேசுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது தனது நண்பர் மல்லிகார் ஜுனா மூலமாக சுகேசின் அறிமுகம் கிடைத்தது என்பதையும், பணம் கொடுத்ததையும் தினகரன் ஒத்துக்கொண்டார்.

    இதனை தொடர்ந்து தினகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 5 நாட்கள் காவலில் எடுத்தனர். நேற்று முன்தினம் முதல் தினகரனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காவலில் எடுத்த மறுநாளே தினகரனை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். நேற்று பிற்பகலில் பலத்த பாதுகாப்புடன் தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.



    அடையாறில் உள்ள வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் 6 மணி நேரத்துக்கு மேலாக அங்கு விசாரணை நடத்தினர்.

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் பின்னணியில் இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை தினகரனின் செல்போன் உரையாடல்கள் மூலமாக திரட்டியுள்ளனர்.

    இதனை அடிப்படையாக கொண்ட ஆவணங்கள் எதுவும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதாவிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விடிய விடிய தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அடையாறில் உள்ள வீட்டில் விசாரணையை முடித்த பின்னர் பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் தினகரன் தங்க வைக்கப்பட்டார். இன்று அவரை பெங்களூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பெங்களூரை சேர்ந்த சிலரும், டி.டி.வி.தினகரனின் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் பற்றி துப்புதுலக்குவதற்காகவே தினகரனை போலீசார் அங்கு அழைத்து செல்கிறார்கள்.

    கேரள மாநிலம் கொச்சிக்கு தினகரன் நாளை மறுநாள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட உள்ளார். சுகேசுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் பணம் ஹவாலா பணமாகும். இந்த பணம் சென்னையில் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிப்பதற்காகவே டெல்லி போலீசார் தினகரனுடன் கொச்சி செல்ல உள்ளனர்.
    Next Story
    ×