search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலையில் மனைவி கைது
    X

    புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலையில் மனைவி கைது

    புதுவையில் சொத்து பிரச்சினைக்காக கள்ளக்காதலனை ஏவி காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் (வயது 43). காங்கிரஸ் பிரமுகரான இவர் ஊசுடு தொகுதி முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆவார். இவர், தனது 2-வது மனைவி பிரியாவுடன் வில்லியனூர் பாண்டியன் நகரில் வசித்து வந்தார்.

    நேற்று இரவு இவர் தனது நண்பர்களான காங்கிரஸ் பிரமுகர்கள் சேகர், அன்பழகன், கிருஷ்ணன் ஆகிய 3 பேருடன் வில்லியனூரில் நடந்த காதணி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார்.

    வில்லியனூர் பாண்டியன் நகர் செல்லும் வழியில் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மாயவன் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளிலேயே அமர்ந்து மது அருந்தினார்.

    அப்போது அங்கு ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென மாயவனை தடியால் தாக்கியது. பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

    அப்போது இதனை பார்த்த மாயவனின் நண்பர்கள் தடுக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் கத்தியை காட்டி உங்களுக்கும் இதே கதி ஏற்படும் என்று மிரட்டியது. இதனால் அவர்களை தடுக்க முடியவில்லை. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், சத்யநாராயணன், புனிதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சொத்து பிரச்சினையால் அவரது முதல் மனைவி ஆட்களை ஏவி மாயவனை கொன்றது தெரிய வந்தது.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    மாயவன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காட்டுக்குப்பத்தை சேர்ந்த விமல் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு சுபாஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    விமல் கல்மேடு பேட்டை சேர்ந்த கோபால் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார். இதனால் விமலின் நடத்தை சரியில்லாததால் மாயவன் விமலின் நெருங்கிய உறவினர் பெண்ணான பிரியாவை 2-வது திருமணம் செய்தார்.

    இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மாயவன் 2-வது திருமணம் செய்ததால் அவரை விட்டு பிரிந்த விமல் தனது மகன் மற்றும் மகளுடன் காட்டு குப்பத்தில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே மாயவன் காட்டுக்குப்பத்தில் பிரியாவின் பெற்றோருக்கு புதிய வீடு கட்டி கொடுத்தார். மேலும் வில்லியனூர் பாண்டியன் நகரில் புதிய வீடு கட்டி பிரியாவுடன் மாயவன் வசித்து வந்தார். அதோடு கூடப்பாக்கத்தில் பிரியாவுக்கு புதிய வீடு கட்டித்தர கட்டுமான பொருட்களை வாங்கி வைத்திருந்தார்.

    இது, முதல் மனைவி விமலுக்கு தெரிய வந்ததும் கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கும் மற்றும் மகன்- மகளுக்கும் சொத்தை எழுதி தருமாறு மாயவனிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால், விமலின் நடத்தை சரியில்லாததால் சொத்தை எழுதி தர மாயவன் மறுத்து வந்தார்.

    இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொத்தை எழுதி தராதது குறித்து விமல் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஆனால், பிரியாவுக்கும், அவரது பெற்றோருக்கும் மாயவன் வீடு கட்டி கொடுத்து வந்ததால் விமலுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் மாயவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதனை தனது கள்ளக் காதலனிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கள்ளக்காதலன் கோபால் கூலிப்படையை ஏவி மாயவனை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து விமல் மற்றும் அவரது மகன் சுபாஷ் கள்ளக்காதலன் கோபால் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய பெரம்பை மற்றும் பூத்துறையை சேர்ந்த கூலிப்படையினர் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×