search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் கனமழை
    X

    ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் கனமழை

    ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் திடீர் மழையால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் முழுவதுமே கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது 100 டிகிரியை தாண்டி வெயில் அளவு பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் அடித்தது.

    வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அனல் காற்றுடன் வெயில் அடிப்பதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தால் சில இடங்களில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடப்பதையும் பார்க்க முடிந்தது.

    வெயிலின் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளில் குவிகின்றனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. புழுக்கம் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் வீடுகளில் இரவில் தூங்க முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். பின்னர் அவர்கள், பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் ஏற்காட்டில் திடீரென சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து கனமழையும் பெய்தது. சுமார் 3 மணி நேரம் இந்த கனமழை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் ஏற்காட்டுக்கு வந்து இருந்த சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே கிடைத்த இடங்களில் தஞ்சம் அடைந்து ஒதுங்கி நின்றதை காண முடிந்தது.

    இந்த மழையின் காரணமாக ஏற்காடு பகுதி பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலின் தாக்கத்தை அனுபவித்து வந்த அவர்கள் திடீர் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை உணர்ந்ததாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் கடைகளில் சூடான பஜ்ஜிகளை வாங்கி சாப்பிட்டனர்.

    இதற்கிடையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஏற்காடு 5 ரோடு பகுதியில் மின்சார வயர் அறுந்து விழுந்து அந்த பகுதி முழு வதுமே மின்தடை ஏற்பட்டது. இரவு 8 மணியை தாண்டியும் மின்சாரம் வராததால் அந்த பகுதி முழுவதுமே இருளில் மூழ்கியது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் தத்தளித்தனர். தொடர்ந்து மின்சார வயரை சீர்செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    Next Story
    ×