search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே காதல் தகராறில் வாலிபர் கொலை: 2 பெண்கள் கைது
    X

    சிவகங்கை அருகே காதல் தகராறில் வாலிபர் கொலை: 2 பெண்கள் கைது

    காதல் தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    மதுரை மாவட்டம் மேலூர் உறங்கான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் வாசுதேவன் (வயது25). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    சமீபத்தில் ஊருக்கு திரும்பிய இவர், நேற்று சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட திருமலை கிராமத்தின் அருகே காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் அருகே கிடந்தது.

    இதுகுறித்து அவரது உறவு பெண் நிசாந்தி (23) மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது வாசுதேவன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மதகுபட்டி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் தீவிர விசாரணை நடத்தினார். இதில் காதல் தகராறில் கொலை சம்பவம் நடந்து இருப்பது தெரியவந்தது.

    திருமலை கிராமத்தைச் சேர்ந்த உறவினரான பெரியகருப்பன் மகள் சித்ராவுக்கும், கொலையான வாசுதேவனுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதனை தொடர்ந்து சித்ரா வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறி உள்ளார். அவர்கள் காரில் செல்லும் தகவல் கிடைத்ததும் பெரியகருப்பன் தரப்பினர் விரைந்து சென்று காரை மறித்து சித்ராவை மீட்டு வந்தனர்.

    இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கீழவளவு போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த சூழலில் வெளி நாட்டில் இருந்து தற்போது ஊருக்கு வந்த வாசுதேவன், திருமலை அருகே உள்ள அழகமா நகரியில் உள்ள தனது நண்பர் பாண்டி வீட்டிற்கு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று சாப்பிட சென்றுள்ளார்.

    இந்த தகவல் சித்ரா குடும்பத்தினருக்கு தெரியவர அவர்கள் பழிதீர்க்க முடிவு செய்தனர். அதன்படி வாசுதேவனை எதிர்பார்த்து திருமலை கிராமத்தின் வெளியே சித்ரா குடும்பத்தினர் காத்திருந்தனர். நேற்று இரவு அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வாசுதேவன் வந்தபோது அவரை வழிமறித்து கம்பு மற்றும் கடப்பாரையால் தாக்கி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பின்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதுபோன்று ஒரு சூழலை ஏற்படுத்தி விட்டு கொலையாளிகள் தப்பி சென்றுள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக மதகு பட்டி போலீசார் விசாரணை நடத்தி பெரியகருப்பன், அவரது மனைவி செல்வி, உறவினர்கள் கருப்பசாமி, செல்லப்பாண்டி, சாந்தி, ஆதீனமிளகி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் செல்வி (33), சாந்தி (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×