search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொட்டிரெட்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
    X

    பொட்டிரெட்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

    பொட்டிரெட்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ளது பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் திடீரென நேற்று பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களில் சிலர் காலிக்குடங்களுடன் அங்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்கள், ‘‘எங்கள் பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை; இதனால் 4 அல்லது 5 குடங்கள்தான் தண்ணீர் கிடைக்கிறது. ஒரு வாரத்துக்கு இவை போதாததால் குடிநீருக்காக நாங்கள் அவதிப்படுகிறோம். எனவே, எங்களுக்கு உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், கமலக்கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருஞானம், ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் எருமப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள்.

    முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள கிணறுகளை தூர்வாரி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×