search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு தரப்பு கோரிக்கை ஏற்பு: பத்திரப்பதிவு தடையை ஐகோர்ட்டு தளர்த்தியது
    X

    அரசு தரப்பு கோரிக்கை ஏற்பு: பத்திரப்பதிவு தடையை ஐகோர்ட்டு தளர்த்தியது

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தி உள்ளது. இதன் மூலம் அக்டோபர் 20-ந்தேதிக்கு முன் வாங்கிய நிலத்தை பதிவு செய்யலாம்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

    ‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக வீட்டு மனையாக மாற்றப்படுகிறது. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருகின்றன.



    விவசாய நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க சட்டப்படி அனுமதி பெறுவதில்லை. அதேநேரம், அங்கீகாரம் இல்லாத, சட்ட விரோதமான இந்த வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனை பத்திரத்தை பத்திரப் பதிவுத்துறையும் தடையின்றி பதிவு செய்கிறது.

    ஒரு ஏக்கர் நிலத்தை வீட்டு மனையாக மாற்றும் போது, சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.20 லட்சம் செலவு செய்ய வேண்டும். ஆனால், இந்த தொகையை செலவு செய்யாமலேயே வீட்டுமனைகள் உருவாக்கப்படுகின்றன’.

    தற்போது உள்ள வீட்டு மனைகளை தமிழக அரசு வரையறை செய்தாலும், அந்த வீட்டு மனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்’.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர், ‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டனர்.

    மேலும், அந்த உத்தரவில், ‘இந்த சட்டவிரோதமான, அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் எவ்வாறு வரையறை செய்யப்படும் என்று தமிழக அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதையடுத்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், ‘2016-ம் ஆண்டுக்கு அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் புதிதாக உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

    இந்த அரசாணையை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இதையடுத்து இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    ஆனால், ‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் திட்டம் குறித்து தமிழக அரசு ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டுமே, இந்த தடையை நீக்க முடியும். அதுவரை தடையை நீக்க முடியாது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய தடை இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் பிறப்பித்த அரசாணையை ஏற்றுக் கொள்கிறோம்.

    அதேநேரம், அங்கீகாரம் இல்லாமல் புதிதாக வீட்டு மனைகள் உருவாக்கியுள்ளவர்கள், அந்த வீட்டு மனைகளுக்கு மத்தியில் 20 அடி சாலை, சாலைக்கு இருபுறமும் 1 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். இதன்பின்னர் உரிய வரியை செலுத்தி, வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம்.

    இதன்மூலம், புதிதாக அமையும் குடியிருப்பு பகுதிகள் கழிவுநீர் தேங்கி அலங்கோலமாக இல்லாமல் இருக்கும்.

    வீட்டு மனைகளுக்கு இனி உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் அங்கீகாரம் வழங்கக்கூடாது. இவற்றையெல்லாம் மனதில் வைத்து, வீட்டு மனைகள் அங்கீகாரம் குறித்து தமிழக அரசு கொள்கை முடிவினை எடுக்கவேண்டும். அதன் படி, ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த திட்டத்தை ஏப்ரல் 11-ந்தேதிக்குள் உருவாக்க வேண்டும். அதை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×