search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஞ்சல் ஊழியர்கள் வேலைவாய்ப்பு தேர்வு குறித்து விசாரணை: மு.க.ஸ்டாலின்
    X

    அஞ்சல் ஊழியர்கள் வேலைவாய்ப்பு தேர்வு குறித்து விசாரணை: மு.க.ஸ்டாலின்

    அஞ்சல் ஊழியர்கள் வேலைவாய்ப்பு தேர்வில் அரியானா மாணவர்கள் தமிழில் அதிகம் மதிப்பெண் பெற்றது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    மத்திய தொலை தொடர்புத்துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 11.12.2016 அன்று நடந்த அஞ்சல் ஊழியருக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில், மதிப்பெண் வழங்குவதில் முறைகேடுகள் நிகழ்ந்து, அதனால் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்களின் வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலை உங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

    அஞ்சல் துறையால் நடத்தப்பட்ட தேர்வில் அரியானாவை சேர்ந்த மாணவர்கள் தமிழில் 25-க்கு 24 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பற்றி தமிழ்நாடு மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அரியானாவை சேர்ந்த ஒரு மாணவர், தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் திறமையின் அடிப்படையிலும், பிழை ஏற்படுத்தாத மதிப்பீடுடனும், முறையாகவும் அதிக மதிப்பெண்கள் பெற்றால் இந்த உலகில் அதிக மகிழ்ச்சி கொள்பவன் நானாகவே இருப்பேன். அதேநேரம், தவறான மதிப்பீடும், முறைகேடுகளாலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாணவர் பாதிக்கப்பட்டால் அது என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தும்.

    அரியானாவை சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக தமிழ் மொழியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையின் ஒட்டுமொத்த மதிப்பீடின் மீதும் அவர்கள் உளப்பூர்வமான புகாரை தெரிவிக்கிறார்கள்.



    தேர்வு முறையின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படைத்தன்மையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரசாரம் செய்கிற வேளையில், இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்களை நீங்கள் தீவிர கவனத்தில் கொண்டு, அஞ்சல் துறையின் நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில் நம்பிக்கையை ஏற்படுத்துவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    ஆதலால், நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையின் எந்த பணியமர்த்தும் நடை முறையிலாவது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையில் குறைபாடுகள் ஏற்படின் அது மாணவர்களின் எதிர்காலத்தை ஈடுசெய்ய முடியாத அளவுக்கு பாதிக்கும் அளவு தீங்கை உண்டாக்கும்.

    வேலையின்மை பிரச்சினை இளைய தலைமுறையினரை அச்சுறுத்தி வரும் சூழலில், அஞ்சல் ஊழியருக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில், அரியானா மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, வேலை கிடைக்குமென்ற பெரும் நம்பிக்கையில் தேர்வு எழுதியுள்ள வேலையில்லாத தமிழக இளைஞர்களுக்கு நீதியினை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×