search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் 23-ந் தேதி வாக்கெடுப்பு
    X

    ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் 23-ந் தேதி வாக்கெடுப்பு

    ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி தி.மு.க. கொண்டுவரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் 23-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
    சென்னை:

    ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி தி.மு.க. கொண்டுவரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் 23-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி அ.தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு அவையில் இருந்து தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து சபாநாயகர் மீது அவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை சட்டசபை செயலகத்தில் பிப்ரவரி 21-ந் தேதியன்று தி.மு.க. கொடுத்திருந்தது.

    சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான கடிதத்தை அவை விதிப்படி விசாரணைக்கு எடுக்க முடியாது என்று கூறப்பட்டதை அடுத்து, கடந்த 9-ந் தேதியன்று, அவை விதி 68-ம் பிரிவை குறிப்பிட்டு மற்றொரு கடிதம் தி.மு.க. சார்பில் சட்டசபை செயலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    அது, ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்துக்கான கடிதமாகும். அந்த கடிதத்தை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் கொடுத்தனர்.

    அந்த விதிப்படி, கடிதம் கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்கு பிறகு, சபாநாயகரை நீக்கும் தீர்மானம் அவையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 22-ந் தேதியோடு (நாளை) 14 நாட்கள் நிறைவடைகிறது. அந்த விதிப்படி, கடிதம் கொடுத்து 14 நாட்கள் முடிந்த மறுநாளில் கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

    எனவே, 23-ந் தேதி சட்டசபையில் இந்த பிரச்சினை எடுத்துக் கொள்ளப்படுகிறது. 23-ந் தேதிக்கான அவை நிகழ்ச்சி நிரலில், கேள்வி நேரத்துக்கு அடுத்ததாக இந்தத் தீர்மானம் அச்சிடப்பட்டு இருக்கும்.

    அதன்படி, சபாநாயகர் ப.தனபால், அந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்கலாமா என்று அவையின் முடிவுக்கு விடுவார். அதற்கு குறைந்தபட்சம் 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 35-க்கும் மேல் இருப்பதால், அந்த தீர்மானத்தை அவையில் விவாதிக்க ஆதரவு கிடைத்து விடும்.

    உடனே ப.தனபால் சபாநாயகர் இருக்கையை விட்டு இறங்கி வெளியே சென்று விடுவார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அந்த தீர்மானம் தொடர்பாக அவையை நடத்துவார்.

    சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது பேசுவதற்கு தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். காங்கிரஸ் கேட்டுக் கொண்டால் அக்கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

    அதன் பின்னர் அந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். பொதுவாக குரல் வாக்கெடுப்புக்கே சபையில் முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், தி.மு.க. வற்புறுத்தினால் ஒருவேளை எண்ணி கணிக்கும் முறைப்படி (டிவிஷன்) வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.

    அப்போது அவையில் பகுதி வாரியாக, தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என்று தனித்தனியாக எம்.எல்.ஏ.க்கள் நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். ஆதரிப்போர் முதலில் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர் குறிக்கப்படும். பெயர்களை சட்டசபை செயலாளர் படிப்பார்.

    பின்னர் தீர்மானத்தை எதிர்ப்போர் தனியாகவும், நடுநிலை வகிப்போர் தனியாகவும் நிற்பார்கள். அவர்களின் பெயர் குறிக்கப்பட்டு வாசிக்கப்படும். தீர்மானத்தை ஆதரிப்போர் அல்லது எதிர்ப்போரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தத் தீர்மானம் வெற்றியோ, தோல்வியோ அடையும்.

    இந்த தீர்மானத்தில் சபாநாயகரோ, அல்லது துணை சபாநாயகரோ வாக்களிக்க இயலாது. ஓ.பன்னீர்செல்வத்தின் அணி எம்.எல்.ஏ.க்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    ஏற்கனவே கடந்த மாதம் 18-ந் தேதி அரசின் நம்பிக்கை தீர்மான நடவடிக்கைகளில் ஏற்பட்ட பரபரப்பு போல, 23-ந் தேதியன்று சபாநாயகர் பதவியில் இருந்து ப.தனபாலை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது நடத்தப்படும் வாக்கெடுப்பும் மிகுந்த பரபரப்புடன் காணப்படும். 
    Next Story
    ×