search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு: ராமேசுவரம் மீனவர்கள் டெல்லி புறப்பட்டனர்
    X

    நாளை சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு: ராமேசுவரம் மீனவர்கள் டெல்லி புறப்பட்டனர்

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுவதற்காக ராமேசுவரம் மீனவர்கள் இன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர்.
    அவனியாபுரம்:

    ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ, மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை கண்டித்து மீனவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள்.

    அவர்களை, மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை சந்திக்க அனுமதி பெற்றுத்தருவதாகவும், இனி இது போன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்தநிலையில் அவர்கள் நாளை (21-ந் தேதி) மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டது.


    இதற்காக மீனவர் சங்க பொறுப்பாளர்கள் தேவதாஸ், சேசுராஜா, அருளானந்தம், ஜஸ்டின், அந்தோணிசாமி, சைமன் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை மதுரை வந்தனர். அவர்கள், மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

    முன்னதாக, மீனவர் சங்க பொறுப்பாளர்களில் ஒருவரான தேவதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:-

    மீனவர் பிரிட்ஜோ உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இலங்கை அரசு கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டும்.

    இனிமேல் இலங்கை கடற்படையினரின் தாக்குதல், விரட்டியடித்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இது பற்றி பேசுவதற்காக டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை நாளை சந்தித்து பேசுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமேசுவரம் மீனவர் குழுவுடன், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சுப. நாகராஜன், ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் முரளிதரன் ஆகியோரும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
    Next Story
    ×