search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மட்டம் குறைந்ததால் மேட்டூர் அணை குட்டைபோல் காட்சி அளிக்கிறது.
    X
    நீர்மட்டம் குறைந்ததால் மேட்டூர் அணை குட்டைபோல் காட்சி அளிக்கிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழாக குறைந்ததால் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான நீர்இருப்பு இல்லாததால் 3 மாதம் காலதாமதமாக செப்டம்பர் மாதம் 20-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதற்கிடையில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி கர்நாடக அரசு அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்து போனதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

    மேட்டூர் அணையின் நீர் ஆதாரத்தை கொண்டு சேலம் மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 அடியாக சரியும் வரை அணையில் இருந்து இந்த திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படும். நேற்று முன்தினம் 30.08 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 29.95 அடியாக குறைந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 30 அடிக்கும் கீழாக இதுபோல் நீர்மட்டம் குறைந்துள்ளது.



    தற்போது, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் இனி இன்னும் நீர்மட்டம் வேகமாக சரியும். இதனால் மேட்டூர் அணையை நம்பியுள்ள சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

    இதேபோல காவிரி கரையோர மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

    தற்போது சேலம் மாநகராட்சியில் வாரத்துக்கு ஒரு நாள் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால், இனி 2 வாரங்களுக்கு ஒருமுறை என்னும் நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.


    Next Story
    ×