search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் பேனாவால் எழுதப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பு
    X

    வங்கியில் பேனாவால் எழுதப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பு

    புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி ஊழியர் பேனாவால் எழுதப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால் அந்நோட்டை வாடிக்கையாளர் கிழித்து எறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    சென்னை:

    புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளில் எந்தவித எழுத்துக்களோ, கிறுக்கல்களோ இடம் பெறக்கூடாது என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    ரூபாய் நோட்டுகளில் தேவையற்ற எழுத்துக்கள், கீறல்கள் இருந்தால் அவற்றின் மதிப்பு குறைவாக கருதப்படும்.

    பிறநாடுகளின் ரூபாய் நோட்டுகளில் அவர்கள் எதையும் எழுதுவது இல்லை. அந்த நாட்டின் பணத்திற்கு மதிப்பளிப்பதோடு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ரூபாய் நோட்டுகளில் கவுண்ட் செய்து நெம்பர் போடுவதும், பெயர் போன்ற பல்வேறு எழுத்துக்களை எழுதி களங்கப்படுத்துகிறோம். அதனால் புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை அயல்நாடுகளை போல மதிப்புடன் பராமரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    புதிய ரூபாய் நோட்டுகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. அவற்றுடன் ரூபாய் நோட்டுகள் மீது எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சில விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறது.

    ஆனால் எப்போதும் போல ரூபாய் நோட்டுகளில் எழுதி பழக்கப்பட்டவர்களால் இன்னும் மாறமுடியவில்லை. புதிய 2000 ரூபாய் நோட்டிலும் தங்களை அறியாமல் எழுதி விடுகின்றனர். அதன்பிறகு தாங்கள் செய்த தவறை உணருகின்றனர்.

    அதுபோன்ற ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் ஏற்கப்படுவது இல்லை. திருப்பி கொடுத்து விடுகின்றனர். வங்கிகளிலும் இப்போது ஒவ்வொரு நோட்டுகளாக ஆய்வு செய்கின்றனர். நோட்டுகளின் இருபக்கமும் பார்த்துதான் பணத்தை வாங்குகிறார்கள்.

    புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் அந்த வங்கியிடம் சில நாட்களுக்கு முன்பு ரூ.2000 நோட்டுகள் வாங்கி சென்றுள்ளார். அதில் ஒரு நோட்டில் பேனாவால் எழுதப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் வங்கிக்கு சென்று “இந்த நோட்டு தங்கள் வங்கியில் வாங்கியது தான். இதனை மாற்றித் தரும்படி கேட்டார்.


    அதற்கு வங்கி ஊழியர் நாங்கள் கொடுத்தோம் என்பதற்கு என்ன சான்றுள்ளது. பணம் கொடுத்த அப்போதே நீங்கள் பார்த்து வாங்கி இருக்க வேண்டும். இப்போது வாங்க இயலாது என்று மறுத்து விட்டனர்.

    அவர் நான் தங்கள் வங்கியில் நீண்டகால வாடிக்கையாளர். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். ஆனால் அந்த ஊழியரோ எதையும் கேட்கவோ, ஏற்கவோ மறுத்து விட்டார்.

    ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் வங்கி ஊழியர் முன்பே 2000 ரூபாய் நோட்டை கிழித்து தூக்கி எறிந்து விட்டு சென்றார். இதை அங்கு நின்ற மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    ரூபாய் நோட்டின் மீது எழுதுவதை தவிர்க்க வேண்டும். நம்முடைய பணம் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சொந்தமானது என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.
    Next Story
    ×