search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து 3 வழக்குகள்: ஐகோர்ட்டில் பிற்பகலில் விசாரணை
    X

    ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து 3 வழக்குகள்: ஐகோர்ட்டில் பிற்பகலில் விசாரணை

    அரசு நலத்திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளின் விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.
    சென்னை:

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவர் சி.குமரன். ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதத்திலும், அரசு நிர்வாகத்திலும் உள்ள ஊழலை எதிர்த்து போராடிய தந்தை பெரியாரின் கொள்கையை தீவிரமாக பின்பற்றி வருபவன். ஒருகாலத்தில் ஊழல் என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பாவச்செயலாக கருதப்பட்டது. ஊழல் செய்பவர்கள் தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்பட்டனர்.

    ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டன. ஊழல்வாதிகள் சமுதாயத்தில் மிகப்பெரிய பதவிகளை அலங்கரிக்கின்றனர். இப்போதெல்லாம் ஊழல் நாளுக்கு நாள் வளமாகி வருகின்றன.

    1991 முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதா தமிழக முதல்அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, சென்னை சிறப்பு கோர்ட்டில் இருந்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு கோர்ட்டு, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை குற்றவாளிகள் என்று முடிவு செய்து, 4 ஆண்டு சிறை தண்டனையும், பல கோடி ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து கர்நாடக மாநில அரசு, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் முன்பே ஜெயலலிதா இறந்து விட்டார்.

    இதையடுத்து கடந்த 14-ந்தேதி தீர்ப்பு அளித்த சுப்ரீம்கோட்டு, ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரது பெயரை மட்டும் நீக்குவதாக கூறியுள்ளது.

    முதல்-அமைச்சர் பதவியில் இருப்பவர்களே இதுபோன்ற ஊழல் குற்றத்தில் ஈடுபடும் போது, அவருக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளையும் ஊழல் செய்ய தூண்டுவது போல் உள்ளது. நாட்டில் எந்த ஒரு தலைமை செயலாளர் வீட்டிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தியது கிடையாது. ஆனால், ஊழல்வாதியான மறைந்த ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்ததால் தான், தமிழக (முன்னாள்) தலைமை செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்கு அனுமதி அளித்தால், ஊழல்வாதிகளின் புகைப்படங்களை எல்லாம் அரசு அலுவலகங்களில் வைப்பார்கள் என்ற எண்ணத்துடன் அரசு உயர் அதிகாரிகளும் ஊழல் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

    தற்போதைய நிலவரப்படி மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி ஆவார். அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் சுப்ரீம் கோட்டின் உத்தரவின்படி, தமிழக அரசு விரைவில் முடக்கப் போகிறது. இந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியை அரசு செலவில் நினைவு சின்னமாக மாற்றப்படும் என்று முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கோர்ட்டினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரின் புகைப்படங்களை, அரசு அலுவலகங்களில் வைத்தால், நாளை இதே போன்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் தங்களது புகைப்படத்தையும் வைக்கவேண்டும் என்று உரிமை கொண்டாடத் தொடங்கி விடுவார்கள்.

    குற்றவாளியான ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் புதைக்கக் கூடாது. குற்றவாளியான அவரது உடலை வேறு இடத்துக்கு தோண்டி எடுத்து மாற்றவேண்டும் என்று கடந்த 21-ந்தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளேன்.


    சமுதாய நலனுக்காக பாடுபட்ட தலைவர்களின் சமாதியைத் தான், நினைவு இடமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார் ஆகியோரது இடங்கள் நினைவு இல்லங்களாக உள்ளன. முதல்-அமைச்சராக பதவி வகித்த காமராஜர் மறைவின்போது, அவரிடம் வெறும் ரூ.300 மட்டுமே இருந்தது. அவர் பெயரில் வேறு எந்த சொத்துக்களும் இல்லை.

    அதனால், அவர்களது நினைவிடங்கள் பொது மக்களால் போற்றப்படுகின்றன.

    ஆனால், ஜெயலலிதா நாட்டிற்காக சிறை செல்லவில்லை. அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர். அவரது நினைவகத்துக்கு அரசு செலவில் நிதி ஓதுக்கீடு செய்து, பராமரித்தால், அது தவறான எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும். தண்டனை குற்றவாளியை கவுரவிக்க அரசுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது.

    எனவே, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவகத்தை அரசு செலவில் கட்டக்கூடாது என்றும் அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்கள் ஆகியவற்றில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதிமகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறினார்கள்.

    அப்போது மூத்த வக்கீல் வில்சன் எழுந்து, ‘சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிக்கூட பைகளில், இலவச லேப்டாப்புகளில் மற்றும் அரசு நலத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது என்று சேப்பாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் வழக்கு தொடர உள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று கூறினார்.

    அதேபோல, வக்கீல் கே.பாலுவும் ஆஜராகி, ஜெயலலிதாவின் புகைப்படம் அரசு திட்டங்களில் இடம் பெறக்கூடாது என்று வழக்கு தொடர உள்ளதாக கூறினார்.

    இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார்கள்.
    Next Story
    ×