search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்திற்கு மட்டும் ஏன் அபாயகரமான திட்டங்கள்? - விஜயகாந்த் கேள்வி
    X

    தமிழகத்திற்கு மட்டும் ஏன் அபாயகரமான திட்டங்கள்? - விஜயகாந்த் கேள்வி

    தமிழகத்தில் மத்திய அரசானது ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசானது முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் கூறியதாவது:-

    எந்தவொரு திட்டமும் மக்களுக்காகத்தான் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அவர்களது கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது அல்ல.

    குறிப்பாக கெயில் திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம் போன்றவை அச்சமூட்டக்கூடிய திட்டம் என்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம் என்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கருதுவதால் அவர்களின் அனுமதி பெற்றால் மட்டுமே அவை வரவேற்புக்குரியதாக அமையும்.



    அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற திட்டங்களை மற்ற மாநிலங்களில் கொண்டுவர மறுப்பது ஏன்? இந்த திட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை வெளிப்படையாக அறிவித்து சரியான திட்டம்தான் என சந்தேகமின்றி நிரூபித்து அதனை மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது போன்ற திட்டங்களை தேமுதிக ஆதரிக்கும்.

    தமிழ்நாட்டு மக்களின் கருத்தை அறிந்த பிறகு திட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் அனில் மாதவ் தாவே தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் 3 , 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவ்வாறு தொடங்கியிருந்தால் அதனை செயல்படுத்தாமல் உடனடியாக பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

    தமிழக விவசாயிகள் ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர். கடன் தொல்லையாலும் தண்ணீர் இன்றி வறட்சியாலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மேலும் அவர்களை பாதிப்பு அடையாமல் செய்ய ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைத்து விவசாயிகளை காப்பாற்றுவது நமது கடமையாகும்.

    இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
    Next Story
    ×