search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வகோட்டை அருகே பால் வேன் மோதி யூ.கே.ஜி. மாணவி பலி
    X

    கந்தர்வகோட்டை அருகே பால் வேன் மோதி யூ.கே.ஜி. மாணவி பலி

    கந்தர்வகோட்டை அருகே பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்ற “யூ.கே.ஜி.” மாணவி மீது பால் வேன் மோதி பரிதாபமாக இறந்தாள்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் ஷாலினி (வயது 4). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள்.

    இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற ஷாலினியை, அவரது தாத்தா கோவிந்தன் மாலையில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற பால் வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக ஷாலினி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஷாலினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அவரது தாத்தா கோவிந்தன் கதறி அழுதார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஷாலினி பரிதாபமாக இறந்தாள்.

    பின்னர் ஷாலினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பால்வேனை புதுக்கோட்டை இச்சடியில் வைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அதில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய பால் வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை அருகே பால்வேன் மோதி யூ.கே.ஜி. மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×