search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் காளைகளை அழிக்க ‘பீட்டா’ முயற்சியா? - வாட்ஸ்அப்பில் பரவும் தகவல்
    X

    தமிழகத்தில் காளைகளை அழிக்க ‘பீட்டா’ முயற்சியா? - வாட்ஸ்அப்பில் பரவும் தகவல்

    தமிழகத்தில் காளைகளை அழிக்க ‘பீட்டா’ அமைப்பு முயற்சி செய்வதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவி வருகிறது.
    சென்னை:

    பாரம்பரிய உரிமையை மீட்க தொடங்கிய போராட்டம் பல திரைமறைவு ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

    ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா அமைப்புதான் முக்கிய காரணம் என்பது எல்லோரும் அறிந்ததே. அதனால்தான் பீட்டாவே நாட்டை விட்டு ஓடு என்ற கோ‌ஷம் வானளாவ எதிரொலிக்கிறது.

    அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் 36 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘விலங்குகளை பாதுகாக்க’ என்ற கோ‌ஷத்தோடுதான் தோற்றுவிக்கப்பட்டது.

    ஆனால் திரைமறைவில் பல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்பட்டு பணத்தை குவித்தது. வெறும் 300 ஊழியர்களை கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் தற்போதைய கையிருப்பு சில ஆயிரம் கோடிகளை தாண்டிவிட்டது. விலங்குகளை பராமரிக்க இவ்வளவு பெரிய தொகையை இவ்வளவு குறுகிய காலத்தில் விலங்கின ஆர்வலர்கள் நன்கொடையாக வழங்கி இருக்க முடியுமா?

    தனது பசப்பு வார்த்தைகளால் உலகம் முழுவதும் மக்களை ஈர்த்தது. இந்த அமைப்பின மோசடி வலையில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறார்கள்.

    நம் நாட்டில் மும்பையில் 2005-ல் கால்பதித்த இந்த அமைப்பில் ஹேமமாலினி, பிரவீணா டாண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் ஏராளமானோர் உறப்பினர்களாக இணைந்து இருக்கிறார்கள்.

    மிருகங்கள் பாவம், அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இரக்க உணர்வால் சேர்ந்து இருப்பார்கள். ஆனால் இது மக்களை அழிக்க வந்த கொடிய மிருகம் என்பது புரியவில்லை.

    விலங்குகளை காப்போம் என்று வெளியே கூச்சல்போடும் இந்த அமைப்பு விலங்குகளை அழிப்பதிலும் முன்னணியில் இருக்கிறது.

    இதனால் சொந்த நாட்டிலேயே இந்த அமைப்பை பல மாநிலங்களில் விரட்டி அடிக்கிறார்கள்.

    பன்னாட்டு வியாபார சந்தையாக மாறிவிட்ட இந்தியாவிலும் தனது வியாபார யுத்தியை கனகச்சிதமாக வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    அதன் திட்டம் நம்மவர்களின் அறியாமையால் மிக அழகாக நிறைவேறி வருகிறது.

    உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாக திகழ்வது பால். தாய்பாலுக்கு இணையானது பசும்பால்.

    பால் உற்பத்தி, பால் பொருட்கள் விற்பனையை குறிவைத்து தனது தாக்குதலை தொடங்கியது. உலக அளவில் ஏ-1, ஏ-2 என்ற இருவகையில் உள்ளது. இதில் ஏ-2 ரகம் தான் சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தியும், மருத்துவ குணமும் நிறைந்தது. இந்த ரக பால் நம் நாட்டு மாடுகளிடம் இயற்கையாகவே கிடைத்து வருகிறது.

    இந்தியா முழுவதும் 37 வகையான பாரம்பரிய இன மாடுகள் உண்டு. தற்போது அதில் பெரும்பாலான இனங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

    வெண்மைபுரட்சி என்ற எண்ணத்தில் அதிகமாக பால் தரும் வெளிநாட்டு ரக பசுக்களை இந்தியாவிலும் அறிமுகம் செய்தார்கள்.

    மரபணு மாற்று முறையில் உருவாக்கப்படும் இந்த மாடுகள் குடம் கணக்கில் பால் தரும். ஆனால் அதில் வி‌ஷமும் கலந்து இருக்கும். அதாவது இந்த மாடுகள் தருவது ஏ-1, ரக பால். இந்த பாலை குடிப்பதால், சர்க்கரை வியாதி உருவாகிறது.

    இந்த பாலில் உள்ள பிசி எம்-7 என்ற மூலப்பொருள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஏ-2 ரக பால் என்று தனியாக விற்கிறார்கள். ஆரோக்கியமான பால் என்பதால் அதிக விலை கொடுத்து மக்கள் அதை வாங்குகிறார்கள்.

    இந்த பால் உற்பத்தியை தடுத்துவிட்டால்.... இது தான் பீட்டாவின் நோக்கம்.

    நம்மவர்களும் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டது போல் வெளிநாட்டு பசுக்கள் மீது மோகம் கொண்டதும் பீட்டாவுக்கு மிகவும் வசதியாகிவிட்டது.

    பல பண்ணைகளில் ஜெர்சி ரக மாடுகள் தான் வளர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நமது நாட்டை பொறுத்தவரை நமது நாட்டு இன பசுக்களை கிராம மக்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் வளர்க்கிறார்கள். பசுக்களையும் நாட்டு இன காளைகள் மூலம் கருவூட்டல் செய்து வருகிறார்கள்.

    இந்த காளை ரகங்களை அழித்துவிட்டால் தானாகவே செயற்கை கருவூட்டலுக்கு மாறுவார்கள். அதன் மூலம் வெளிநாட்டு மருந்துகள் பெருமளவில் விற்பனையாகும்.

    வெளிநாட்டு பசுக்களை வாங்கி பராமரித்து வளர்ப்பது சாதாரண மக்களால் முடியாது. பெரிய பால் நிறுவனங்களோடு அவர்களால் மல்லுகட்டவும் முடியாது. இதனால் மாடு வளர்ப்பையே கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    இப்போது அந்த நிலைக்கு வந்து விட்டார்கள். நம் மாநிலத்தின் காங்கேயம் பசுக்களை காண முடியவில்லையே!

    நம் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் திமில் பெரிதாக இருக்கும். ஆனால் கலப்பினங்கள் ஊடுருவி நாட்டு இனங்களும் ஒரிஜினலாக இல்லை என்பது தான் உண்மை.

    கலப்பின வெளிநாட்டு பசுக்கள் தரும் பால் மூலம் சர்க்கரை வியாதி மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வித நோய்களுக்கு ஆளாகிறார்கள். மருந்து மாத்திரை விற்பனை பல மடங்கு அதிகரிக்கிறது. மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள் மக்களை அழித்து பணத்தை அள்ளுகின்றன. இதை செயல்படுத்தும் பீட்டாவும் பணத்தில் கொழுத்து போகிறது.

    விரைவில் ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனமும் இந்தியாவில் பால் விற்பனையை தொடங்க இருக்கிறது. பெருமளவில் பால் விற்பனையிலும் புகுந்து ஆதிக்கம் செலுத்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்த அமைப்பு வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.

    அதற்காக பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாவற்றையும் அழித்து, மக்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறார்கள்.

    உலக அளவில் மாட்டு இறைச்சியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா. அதை இந்த அமைப்பு கண்டு கொள்ளவில்லையே.

    உலக அளவில் அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள் தான். அதை ஏன் கேட்கவில்லை? எல்லாம் வியாபார தந்திரம் தான் என்பது புரிகிறது.

    ஆலம் விழுது, வேப்பங்குச்சி, உப்பு கலந்து பல் துலக்கி ஆரோக்கியமாக இருந்த போது பற்பசைதான் ஆரோக்கியம் என்று விளம்பரப்படுத்தி வியாபாரத்தை பெருக்கினார்கள். நாம் உண்மையை உணர்ந்ததும் உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறதா? என்று கேட்டு வேறு பாணியில் விற்பனையை தொடங்கினார்கள்.

    எந்த மிருகமும் வதைக்கப்படவோ, கொல்லப்படவோ, நமக்கு உணவாகவோ பயன்படுத்துவதற்கு அல்ல என்று கோ‌ஷம் போட்டு வே‌ஷம் போடும் பீட்டா, அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கோழி இறைச்சி உணவை தடுக்கலாமே.

    ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள். அதைத்தான் பீட்டாவும் செய்து கொண்டிருக்கிறது.

    கொழுந்துவிட்டு போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதும் நேற்று வெளிநாட்டில் இருந்து ஜெர்சி இனப்பசுக்கள் சென்னை வந்தன. எதிர்ப்பின் காரணமாக அந்த பசுக்கள் வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    இந்த தகவல்களை வாட்ஸ்அப், முகநூல் மூலம் இளைஞர்கள் விலாவாரியாக விவரித்து பரவ விட்டுள்ளார்கள். அதை பார்த்து மக்கள் திரளுகிறார்கள்.

    தமிழக மாணவர்களும், உலகை விரல் நுனியில் வைத்திருக்கும் ஐ.டி. ஊழியர்களும் உண்மையை கண்டு பிடித்துவிட்டார்கள். அதனால் தான் வீதிக்கு வந்து கொதித்து எழுந்து நிற்கிறார்கள்.

    இது வெறும் ஜல்லிக்கட்டோ, தமிழ்நாட்டோடு நின்று விடும் போராட்டமல்ல நாட்டை கட்டிக் காக்கப்போகும் போராட்டம்.

    Next Story
    ×