search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நினைப்பதை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
    X

    மக்கள் நினைப்பதை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

    ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்; பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் அறப்போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேநேரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவோ, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவோ அரசு முயலாதது கண்டிக்கத்தக்கது.

    அலங்காநல்லூரில் போராடிய இளைஞர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை வழங்க முன்வந்த போது, அவற்றை தடுத்து திருப்பி அனுப்பியது, உணவு தர முன்வந்த உள்ளூர் பெண்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையும் தொடர்புபடுத்தி கொச்சையான வார்த்தைகளை உதிர்த்தது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்ட காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறும் பகுதியில் மின்சாரத்தை துண்டித்திருக்கிறது.

    மின்சாரத்தை துண்டித்தால் போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்ற புத்திசாலித்தனத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது.

    மாணவர் சக்தி எல்லையில்லா வலிமை கொண்டது. உலகின் பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தவை மாணவர்களின் போராட்டங்கள் தான். 1967-ஆம் ஆண்டில் தமிழ்நாட் டில் ஆட்சி மாற்றம் ஏற்பட அடித்தளம் அமைத்ததும் 1965-ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தான்.

    மாணவர் சக்தியை குறைத்து மதிப்பிட்டவர்கள் வீழ்ந்து போனதை விளக்க பல வரலாறுகள் உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்தை இன்னுமொரு போராட்டமாக நினைத்து அலட்சியம் காட்ட வேண்டாம். மாணவர் சக்தியை மதித்து, அவர்களுடன் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலைநகர் சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், போராட்டப்பகுதியை கடந்து பலமுறை செல்லும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த முன்வராதது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் இன்று அதிகாலை நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்து விட்டன.

    இதன்பிறகும் முதலமைச்சர் ஒதுங்கி இருக்காமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஆந்திரா, கேரளம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாக இத்தகைய நெருக்கடி ஏற்பட்டபோது, அம்மாநிலங்களின் முதலமைச்சர்கள் மக்களின் பக்கம் தான் நின்றார்களே தவிர, மக்களை ஒடுக்க முயலவில்லை. உச்சநீதிமன்றத்தின் தடையை ஒதுக்கி வைத்துவிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாகும்.

    எனவே, முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பிரதமருடன் பேசி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க இயலுமா... இயலாதா? என்பதைக் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும்.

    அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றால், ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் நடத்தப்பட்டது போன்று தமிழகத்திலும் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×